கருணாநிதியை மோடி சந்தித்த பிறகு பாஜகவுக்கு 'கருணை காட்டுகிறதா' திமுக?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியுடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு பாஜகவுக்கு எதிரான நடவடிக்கையில் திமுக மென்மையான அணுகுமுறைகளை கையாளுகிறதா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
நேற்று, தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார்.
இந்த திடீர் சந்திப்பு அனைத்து கட்சியினரையும், அவர்களின் ஆதரவாளர்களையும் குழப்பிவிட்டது.
முதல் முறை
2004ம் ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியபிறகு இரு கட்சிகளின் உச்சபட்ச அதிகாரத்திலுள்ள இருவர் தனிப்பட்ட முறையில் சந்திப்பது இதுதான் முதல் முறையாகும். எனவே இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவத்தை ஈட்டியுள்ளது. தனது தாய், தந்தையர் மீது கனிவு கொண்டு சந்தித்து நலம் விசாரித்ததற்காக மோடிக்கு, அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
வலைத்தளங்களில் குறைவு
வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கும் திமுக அனுதாபிகளும், நேற்றும் இன்றும், மோடியை தாக்கி மீம் போடுவதை குறைத்துள்ளனர். விமர்சனங்களையும் குறைத்துக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு சில நேரங்களில் வந்தபோது, கருணாநிதியை சந்திக்காமல் திரும்பிவிட்டதாக மன வருத்தம் திமுகவினரிடம் இருந்தது உண்டு. அதை ஒப்பிட்டு மோடி வருகையால் மனம் மகிழ்ந்ததாக சில உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் கருத்து கூறியதை பார்க்க முடிந்தது.
போராட்டங்கள் ரத்து
இதனிடையே திமுக கட்சியும் கூட, பாஜகவுக்கு எதிரான கடுமையை குறைத்துக்கொண்டதோ என்ற பேச்சு அரசியல் நோக்கர்களிடம் எழுந்துள்ளது. நாளை நடைபெறவிருந்த பண மதிப்பு நீக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலிருந்து 8 மாவட்டங்களுக்கு திமுக விலக்கு கொடுத்துள்ளது இதற்காகவோ என்ற ஒரு பேச்சும் உள்ளது.
ரத்து சந்தேகம்
பண மதிப்பிழப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இதை கறுப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டங்களை நாடு முழுக்க நடத்த உள்ளன. திமுகவும், இதை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்புவிடுத்திருந்தது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் நடைபெறவில்லை என திமுக அறிவித்துள்ளது. மழை காரணமாக இவ்வாறு அறிவித்துள்ளதாக திமுக தலைமை அறிவித்தாலும், மோடி-கருணாநிதி சந்திப்பின் பின்னணியுடன் இது அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.