இதுவரை இல்லாத அளவு மோடி மீது கருணாநிதிக்கு திடீர் கோபம் ஏன்?
சென்னை: பிரதமர் மோடியை வழக்கத்திற்கு மாறாக சற்று காட்டமாகவே விமர்சனம் செய்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து மோடி, இந்துத்துவாவை கையில் எடுத்துள்ளதாக கருணாநிதி குற்றம்சாட்டியதோடு, மோடி நாளொரு வேடமும், பொழுதொரு நடிப்புமாக செயல்படுவதாகவும் வார்த்தை நெருப்பை அள்ளி வீசியுள்ளார் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி பொதுவாக தேசிய கட்சிகளுக்கு எதிராக சமீப காலங்களில் இப்படி ஒரு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதில்லை என்கிறார்கள் அவரின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பவர்கள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது, இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்தது. அப்போது கூட சென்னையில் சில மணி நேரம் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தாரே தவிர, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக விமர்சனம் செய்யவில்லை.
கூடா நட்பு
2ஜி வழக்கில், கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரின் உடலில் பொக்களங்கள் ஏற்பட்டதை பார்த்து ஒரு தந்தையாக வருந்தியதாக கருணாநிதி குறிப்பிட்டார் அப்போதும், காங்கிரஸ் தலைமைமீது பெரும் பாய்ச்சலை அவர் நிகழ்த்தவில்லை. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சில காலங்கள் திமுக வெளியேறியபோதுகூட, கூடா நட்பு கேடாய் முடியும் என்று சூசகமாகத்தான் குட்டு வைத்தார் கருணாநிதி. காங்கிரஸ் மீது மட்டுமல்ல, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் தலைமைக்கு எதிராகவும் கடும் சொற்களை கருணாநிதி பிரயோகிக்கவில்லை.
பாஜகவை விமர்சிக்கவில்லை
ஜல்லிக்கட்டு பிரச்சினை உணர்ச்சிகரமாக இருந்த கடந்த ஜனவரி மாதம், கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட ஒரு கேள்வி "ஜல்லிக்கட்டு பிரச்சினையில், பாஜக இரட்டை வேடம் போடுகிறதா" என்பது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதியோ, நான் அப்படி நினைக்கவில்லை, என்று பதிலளித்தார்.
திடீர் விளாசல்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் கருணாநிதி தொடர்ந்து அன்புபாராட்டி வருகிறார். திமுக ராஜ்யசபா எம்.பிக்களும் டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் சிலரிடம் நெருக்கம் காட்டிவருகிறார்கள். இந்நிலையில்தான், பிரதமர் மோடியை இன்று வெளியிட்ட அறிக்கையில் விளாசி தள்ளியுள்ளார் கருணாநிதி. இது தேசிய ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக காண்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது அதிருப்தி
காவிரி பிரச்சினை, ராமர் விவகாரம் ஆகிய இரண்டையும் கையில் எடுத்து மோடியை இவ்வாறு சாடியுள்ளார் கருணாநிதி. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நிலையில், தமிழக ஆளுநர் மூலம், பாஜக ஆட்சியை நடத்த முயல்வதை கருணாநிதி விரும்பவில்லை. மாநில சுயாட்சி என்பது திமுகவின் முக்கிய கொள்கை. தமிழகத்தில் அந்த கொள்கைக்கு மத்திய அரசால் ஆபத்து வருவது வருங்காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருணாநிதி கருதுகிறார்.
காங்கிரசின் காய் நகர்த்தல்
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அப்பல்லோ சென்று, ஜெயலலிதாவை சந்தித்தது, ஸ்டாலின் கொடுக்கும் பேட்டிகளுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு பேசுவது போன்றவை, திமுகவைவிட்டு காங்கிரஸ் விலகிச் செல்வதை போலவும், திமுக பக்கம் பாஜக வருவதை போலவும் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டன. அதிலும், சசிகலா புஷ்பாவுக்கு பாஜகவும், திமுகவும் இணைந்து பாதுகாப்பு கொடுப்பதை போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
சிறுபான்மையினர் ஆதரவு
திமுக பொதுவாக சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் அறுவடை செய்யும் கட்சியாக உள்ளது. சிறுபான்மையினர் பாதுகாவலனாகவே தொடர்ந்து திமுக தன்னை முன்னிருத்தி வருகிறது. இந்த சூழலில், பாஜகவோடு திமுக இணைந்து செயல்படுவது போன்ற தோற்றம், திமுகவின் வாக்கு வங்கியை பதம் பார்த்துவிடும் என்பது கருணாநிதி கருத்தாக உள்ளது.
|
ராஜதந்திரம்
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையில், பாஜக அடித்த அந்தர் பல்டி, அக்கட்சிக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலை பயன்படுத்தி காவிரி மற்றும் இந்துத்துவா இரண்டுக்கும் எதிராக மோடியை கடுமையாக சாடுவதன் மூலம், சிறுபான்மையினர் மற்றும் காவிரி விவகாரத்தில் அக்கறையுள்ள பெரும்பாலான தமிழர்களின் கவனத்தை திமுக ஈர்த்துள்ளது. ரயில் மறியல் போராட்டத்தில் திமுக மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் இதற்கான காய் நகர்த்தல்கள்தான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.