டிடிவி தினகரனை எதிர்த்து மருது கணேஷை திமுக நிறுத்தியது ஏன்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் டிடிவி தினகரனை எதிர்த்து சாதாரண திமுக தொண்டரான மருது கணேஷை நிறுத்தியது ஏன்?
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூகம் என்ன? அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை எதிர்த்து போட்டியிட பிரபலம் இல்லாத மருது கணேஷை திமுக நிறுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் எம்எல்ஏவாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் காலியான இந்தத் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூடி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் வியுகம் என்ன?
சசிகலா குடும்பத்தை தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதுவும் டிடிவி தினகரன் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்ற நிலையில், அவர் ஒரு பிரபலமானவர். அப்படி இருக்கும் போது ஏன் அவரை எதிர்த்து இன்னொரு பிரபலமானவரை திமுக நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவின் அதிரடி
திமுகவின் இதுபோன்ற நிலைப்பாட்டிற்கு ஏற்கவே அதன் வரலாற்றில் சான்றுகள் உள்ளன. 1996ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது திமுகவின் மிகச் சாதாரண உறுப்பினரான இருந்த சுகவனம் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டார்.
சுகவனத்திடம் தோற்ற ஜெ.
அப்போது, தமிழக மக்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத திமுக வேட்பாளர் சுகவனம் 8000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார். மிகவும் பிரபலமான நட்சத்திர வேட்பாளர் ஜெயலலிதாவையே சாதாரண வேட்பாளரான சுகவனத்தை நிறுத்தி காலி செய்தவர்கள் திமுகவினர்.
ஆர்.கே. நகர் திட்டம்
இதுபோன்ற அதிரடி திட்டத்தை ஆர்.கே. நகரில் செயல்படுத்த திமுக முயற்சி செய்துள்ளது. அதனால்தான் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக சுவரொட்டிகளை ஒட்டும் சாதாரண தொண்டராக உள்ள மருது கணேஷ் என்பவரை தேர்வு செய்துள்ளது திமுக.
செய்தியாளர் மருது கணேஷ்
திமுகவின் ஆர்.கே. நகர் வேட்பாளர் அடிப்படையில் ஒரு செய்தியாளராக 25 ஆண்டுகளாக வட சென்னை பகுதியில் பணியாற்றியவர். செய்தி சேகரிக்கும் பணிகளுடனேயே திமுக பொறுப்புகளையும் பார்த்து வந்த மருது கணேஷுக்கு ஆர்.கே. நகரின் அனைத்து பிரச்சனைகளும் அத்துபடி என்கிறார்கள் திமுகவினர்.
வெற்றி உறுதி
எனவே, அவர் தினகரனை எதிர்த்து போட்டியிட்டு வெல்வார் என்பதால்தான் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று திமுக வட்டாரமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. ஆக, 1996ல் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம் போல், ஜெயலலிதா கட்சி சார்பில் போட்டியிடும் தினகரனை, மருது கணேஷ் தோற்கடிப்பார் என்ற நம்பிக்கையோடு களம் இறக்கியுள்ளது திமுக. பொறுத்திருந்து பார்ப்பார்ப்போம்.