பாஜகவுக்கு எதிரான பந்தில் பங்கேற்காத திமுக... காங் அதிருப்தி.. அப்ப அதிமுகவினர் கூறுவது உண்மைதானா?
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் அழைப்பு விடுத்த பாரத் பந்தில் திமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை என்பதை பார்க்கும் போது கூட்டணி குறித்து அதிமுகவினர் கூறும் யூகங்கள் சரியாக இருக்கும் என கருதப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் என பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததே கோட்டைக்கு செல்ல முடியாததற்கு காரணம் என்று திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும் திமுக தலைமை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து சென்னைக்கு வந்த மோடி, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இது காங்கிரஸுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அமித்ஷாவுக்கு அழைப்பு
இதையடுத்து பல்வேறு விவகாரங்களில் திமுக, பாஜகவை எதிர்த்ததை அடுத்து திமுக- காங்கிரஸுக்குள் எந்த விரிசலும் இல்லை என்பதை நிரூபித்து காங்கிரஸ் வயிற்றில் பாலை வார்த்தது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பிளவு
பின்னர் திமுக - பாஜக கூட்டணிக்காக அடித்தளமாகவே பார்க்கப்பட்டது. இதனாலேயே ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுவும் காங்கிரஸ்- திமுகவுக்குள் பிளவு இல்லை என்பதையே காட்டியது.
சிபிஐ சோதனை
அழகிரி தனது பலத்தை நிரூபிக்க கடந்த 5 -ஆம் தேதி பேரணி நடத்தினார். அதே தினத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.
பாஜக ஏவிவிட்டது
இதனால் விஜயபாஸ்கர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில் திமுக- பாஜக இடையே கூட்டணி உருவாகிறது. எனவே திமுகவை திருப்திப்படுத்த அழகிரியின் பேரணியை இருட்டடிப்பு செய்யவே சிபிஐயை பாஜக அரசு ஏவிவிட்டதாக கூறினர்.
பாரத் பந்த்
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் திமுக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
|
காங்கிரஸ் அதிருப்தி
ஆனால் இந்த போராட்டத்தில் திமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு எம்எல்ஏவையோ மாவட்ட செயலாளரையோ ஸ்டாலின் அனுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் திமுகவினர் நடத்திய போராட்டங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள். மாசெக்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்வது வழக்கம்.
திமுகவினர் விளக்கம்
இந்நிலையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்த அதுவும் மக்கள் நலன் சார்ந்த போராட்டத்துக்கு திமுகவினர் ஒருவரும் கலந்து கொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வைத்து பார்க்கும் போது திமுக- பாஜக கூட்டணி உறுதியாகி வருவதாகவே கூறப்படுகிறது. இதுகுறித்து திமுகவினர் விளக்கம் அளித்தால் மட்டுமே நடப்பது என்ன என்று தெரியவரும்.