அரவக்குறிச்சி, தஞ்சையில் செம அடி வாங்கிய திமுக... ஸ்டாலின் வியூகத்துக்கு பின்னடைவு?
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் திமுக முந்தைய தேர்தல்களை விட வாக்கு சதவீதத்தை பறிகொடுத்திருக்கிறது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மறுதேர்தலில் திமுக கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் படுமோசமாக அடிவாங்கியுள்ளது. இத்தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்த மு.க.ஸ்டாலினுக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.
பணமழை பொழிந்ததால் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தல்களே ரத்து செய்யப்பட்டன. பின்னர் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற நிலையில் அரவக்குறிச்சியைப் பொறுத்தவரையில் கேசி பழனிச்சாமி மீண்டும் போட்டியிட முடியாது என மறுத்து வந்தார். ஆனால் திமுக மேலிடமோ அவரைவிட்டால் செலவு செய்ய யார் இருக்கிறார்கள் என நினைத்து அவரை வலுக்கட்டாயமாக களத்தில் நிற்க வைத்தது.
அஞ்சுகம் பூபதி
இதேபோல் தஞ்சாவூர் தொகுதியில் மே மாத களநிலவரத்தில் திமுக வெல்லும் நிலையில்தான் இருந்தது. அது திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிதான் என்றில்லாமல் யார் நின்றாலும் வெல்லக் கூடிய சூழல் நிலை இருந்தது. ஏனெனில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த ரங்கசாமி அவ்வளவு அதிருப்தி இருந்தது. அதே நேரத்தில் கடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவை நிறுத்தினால் திமுக வெற்றி எப்போதும் 100% உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் ஸ்டாலினின் சாய்ஸ் அஞ்சுகம் பூபதியாகவே தற்போதும் இருந்தது.
அதிர்ச்சியில் திமுகவினர்...
இதனால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் 2011-ம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட படுமோசமான வாக்குகளையே திமுகவால் பெற முடிந்திருக்கிறது. இது திமுகவினரை கடும் அதிர்ச்சி அடையவே வைத்துள்ளது.
2011-ல் அரவக்குறிச்சி..
அரவக்குறிச்சி தொகுதியில் 2011-ம் ஆண்டு திமுகவின் கேசி பழனிச்சாமி 72,335 வாக்குகள் (49.71%) பெற்று எம்.எல்.ஏ.வானார். அத்தொகுதியில் அதிமுக 46.61% வாக்குகளைத்தான் பெற்றிருந்தது.
தற்போது...
ஆனால் தற்போது அதிமுகவின் செந்தில்பாலாஜி 88,068 வாக்குகள் (53.51%) பெற்றிருக்கிறார். திமுகவின் கேசி பழனிச்சாமி 64,407 வாக்குகள் மட்டுமே ( 39.13) பெற முடிந்திருக்கிறது. சுமார் 10% வாக்குகளை திமுக பறிகொடுத்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
டப் ஃபைட் உபயதுல்லா
இதேபோல் தஞ்சாவூர் தொகுதியில் 2011 தேர்தலில் அதிமுகவின் ரங்கசாமி 75,415 வாக்குகள் (50.57%) பெற்றிருந்தார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் உபயதுல்லா 68,086 வாக்குகள் (45.66%) கவுரமாக தோல்வியைத் தழுவினார்.
உயரத்துக்கு போன அதிமுக
ஆனால் தற்போது அதே ரங்கசாமி பெற்ற வாக்குகள் 1,01,362 ; மொத்தம் 54.37%. திமுகவின் அஞ்சுகம் பூபதி 74,488 வாக்குகள் அதாவது 39.95% வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் வெல்லும்... இதையெல்லாம் பார்க்கக் கூடாது என்றெல்லாம் சப்பை கட்டு கட்டாமல் திமுகவின் வியூகம் இன்னமும் வலுவானதாக இருந்திருந்தால் அதிமுகவுக்கு நிச்சயம் டப் ஃபைட் கொடுத்திருக்க முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே கடந்த 2011- தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. அப்போது தேமுதிகவின் ஏகேடி ராஜா 58.70% வாக்குகளைப் பெற்றார். தற்போது அதிமுக ஏகே போஸ் 55.65% வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
கவுரவமான தோல்வி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சுந்தரராஜன் 28.88% வாக்குகளை 2011-ல் பெற்றிருந்தார். தற்போது திமுகவின் சரவணன் 34.64% வாக்குகளைப் பெற்று கவுரமாக தோல்வியைத் தழுவியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.