வன்னியர் வாக்குகளுக்காக கருணாநிதி வைரவிழாவுக்கு விசிகவை அழைக்காத திமுக!
கருணாநிதி வைரவிழாவுக்கு திருமாவளவனை அழைக்கவே கூடாது என திட்டமிட்டே புறக்கணித்ததாம் திமுக.
சென்னை: கருணாநிதி வைரவிழாவில் திமுகவுடன் நெருக்கமாக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திட்டமிட்டே புறக்கணித்ததாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அழைக்கப்படாததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 2019 லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க இடம் பெறும் என உறுதியாக நம்பியிருந்தோம். வாக்கு கணக்குகளுக்காக எங்களைப் புறக்கணிக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகள் கூட்டணியை விட்டு விலகின. இதன்பிறகு, சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள், மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் வைகோவும் விலகினார். '
மநகூ
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என வி.சி.க, சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியபோது, அதை எதிர்த்து சி.பி.எம் வேட்பாளராக லோகநாதன் நிறுத்தப்பட்டார். இந்த நிகழ்வோடு மக்கள் நலக் கூட்டணியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
திமுக பக்கம்
"மக்களின் நம்பிக்கையைப் பெறாததால், மக்கள் நலக் கூட்டணிக்குத் தோல்வி கிடைத்தது. மக்களுக்கான பிரச்னைகளை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதேநேரம், தேர்தல் என்று வரும்போது வெற்றி பெறுவது என்பது மிக முக்கியமானது. தொடர்ந்து தோல்வியை சந்தித்தால், தொண்டர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். இதே கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால், மிக மோசமான தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதால், மதச்சார்பற்ற கூட்டணியை நோக்கி திருமாவளவன் முன்னேறினார். இதற்கு சி.பி.எம் கட்சி ஒத்துழைக்கவில்லை. ' ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ், தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது சரியல்ல' என அவர்கள் விமர்சித்தனர். இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வி.சி.கவும் தி.மு.கவை நோக்கிச் செல்வது என முடிவெடுத்தனர். இதற்கு முன்னோட்டமாக, கருணாநிதி வைர விழாவுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருமாவளவன். எங்களை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டது திமுக என விவரித்தார் வி.சி.கவின் மாநில நிர்வாகி ஒருவர்.
தேசிய அரசியல்
இது தொடர்பாக அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஓர் அணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி வைரவிழாவைப் பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே, அகில இந்திய தலைவர்கள் மேடைகளில் நிரம்பினார்கள். தேசிய அளவில் கூட்டணி அமைத்தாலும், உள்ளூர் அரசியல் சூழல்களுக்கு ஏற்பத்தான் எதையும் முடிவு செய்ய முடியும்.
திருமா-ராமதாஸ்
சட்டமன்றத் தேர்தலில் 5% வாக்குகளை வாங்கினார் ராமதாஸ். திருமாவளவனுக்கு 0.5% வாக்குகளே கிடைத்தன. இதில், திருமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வன்னியர் சமூகம் உள்பட பல சமூகங்கள் தி.மு.கவுக்கு எதிராகப் போய்விடும். தலித் கட்சிகளுக்குள் இருக்கும் உள்பகையால், அந்த வாக்குகளும் தி.மு.கவுக்குக் கிடைக்காமல் போகலாம். எனவேதான், திருமாவுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. ராமதாஸுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. வைரவிழாவில் பங்கேற்றால், தேசிய அளவில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் திருமா. அது நடக்காமல் போன நிலையில்தான், ' வைரவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எங்களையும் விழாவுக்கு அழைத்திருக்கலாம்' எனப் பேட்டியளித்தார் அவர்.
வலிய போகும் திருமா
இதை தி.மு.க முன்னணி நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வி.சி.க இல்லாமல் தேர்தலை சந்திக்கும் முடிவில் இருக்கிறதாம் திமுக. இதனை உணர்ந்துதான், வலிய வந்து வாய்ப்பு கேட்கிறது விடுதலைச் சிறுத்தைகள் என்றார் விரிவாக.