இன்னும் ஏன் "ரஜினி முருகன்" போல வாய் பொத்தி பாயிண்ட் வரட்டும் என காத்திருக்கிறது திமுக..?
இப்படி ஒரு படுகொலை நடந்த பின்னும் திமுக அமைதி காப்பது ஏனாம்? என்பது கேள்வி.
Recommended Video
சென்னை: தமிழகம் கடந்த 2 ஆண்டுகாலமாக சந்தித்து வரும் தூத்துக்குடி படுகொலைகள் உள்ளிட்ட அத்தனை பேரவலங்களுக்கும் சாட்சிகளைப் போல துணை நின்று வலுவான, உறுதியான மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்பாமல் உப்புப் பெறாத போராட்டங்களை மட்டுமே நடத்தி வரும் திமுக மீது மக்கள் கோபப் பார்வையைத் திருப்பியுள்ளனர்.
லட்டு போல 89 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு எத்தனை செய்திருக்கலாம். என்னென்ன செய்திருக்கலாம்.. இத்தனை காலமாக உங்களுக்காக துணை நின்ற மக்களுக்கு தொடர்ந்து துயரம் வந்து சூறையாடிக் கொண்டிருக்கிறதே.. இன்னும் சட்டசபைக்குள் வெறுமனே உட்கார்ந்து கொண்டு என்ன சாதிக்கப் போகிறது திமுக என்பது மக்களின் கோபக் கேள்வியாக உள்ளது.
திமுக மட்டுமல்ல காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் மீதும் மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். எந்தக் கட்சியுமே தங்களுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்பது மக்களின் தீர்ப்பாக உள்ளது.
வெற்றிடம் விளக்கம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கருணாநிதி ஓய்வுக்குப் பின் அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என பலரும் பேசுகின்றனர்... வெற்றிடம் குறித்து விளங்காத வெற்று வியாக்கியானத்தையே திமுக கொடுத்து வருகிறது. வெற்றிடத்தை நிரப்புகிற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஒன்றைக் கூட வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கிற திமுக இதுவரை செய்யவே இல்லை. பாஜகவுக்கு அடிபணிந்து போகிற அரசு, இதோ இன்று போய்விடும் நாளை போய்விடும்..அந்த வழக்கின் தீர்ப்பு வந்தால் போய்விடும்.. எழுதி வையுங்கள் 2 வாரங்களில் போய்விடும் என வாய்ச்சவடால்தான் திமுக விட்டுக் கொண்டிருந்தது.
ஒப்புக்கு போராடங்கள்
ஆனால் வெற்றிகரமாக ஆண்டுகளைக் கடந்து அதிமுக அரசு ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்களும் இருக்கோம்ல என்பதற்கேற்ப எதற்கெடுத்தாலும் நடைபயணம், போராட்டம், ஆர்ப்பாட்டம், காலையில் மறியல் மாலையில் விடுதலை என சலித்துப் போன சங்கரா சங்கரா காலத்து போராட்டங்களில் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறது திமுக. நீட் தேர்வை தடுக்க என்ன ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்தியது திமுக? நீட்டைத் தடுத்து நிறுத்த என்ன சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தது திமுக?
திமுகவின் உச்சகட்ட கோபம்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் ஆண்டாண்டு காலமாக நடத்திய மறியல், வள்ளுவர் கோட்டப் போராட்டத்துக்கு அப்பால் மக்களை திரட்டுகிற ஒரு முயற்சியையாவது மேற்கொண்டதா திமுக? அதுவும் உச்சகட்டமாக திமுக தலைமை அறிவிக்கிறது.. மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்... நீட்டை நிறுத்தாவிட்டால் டெல்லிக்கு போய் மத்திய அமைச்சர்களிடம் மனு கொடுப்போம் என... இதுதான் திமுகவுக்கு இருக்கிற அதிகபட்ச கோபம் போலும்!
டெல்லியை அடக்கிய திமுக அன்று..
திமுக என்றால் இந்தி எதிர்ப்பு போராட்ட களங்களால் அரசாங்கத்தை கிடுகிடுக்க வைத்த கட்சி என பெயர்.. ஈழத் தமிழர் விடுதலைக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை என்ன ஆட்சியையே தூக்கி எறிந்த கட்சி என பெயர்.. ஜனநாயகத்தைக் காக்க சர்வாதிகாரத்தை எதிர்க்க எங்களால்தான் முடியும் என சிறைக்கொட்டடிகளை நிரப்பி டெல்லி ஏகாதிபத்தியத்தை நடுங்க வைத்த கட்சி... நேருவாகட்டும் இந்திராவாகட்டும், ராஜீவ் ஆகட்டும் திமுக போராட்டங்களால் திணறிப் போய் திமிரை அடக்கிக் கொண்டிருந்த காலம் என ஒன்று உண்டு.
2 ஆண்டுகால திமுகவின் நிலை இதுதான்
ஆனால் கடந்த 2 ஆண்டு கால திமுக என்பது அதிமுகவின் பினாமி கட்சியாக, பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கிற ஒரு கட்சியாக மக்களை ஏமாற்றுகிற வெற்று போராட்ட அறிவிப்பு நாடகங்களை நடத்துகிற பக்கா நாடக கம்பெனியாக, குடும்ப கட்சியாக சுருங்கிக் கிடக்கிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு. மக்கள் விரோத சர்க்காரை, மக்களை அடிமைப்படுத்தி தமிழகத்தையே வேட்டைக்காடாக்குகிற மத்திய மாநில சர்க்கார்களை அஞ்சி நடுங்க வைக்கிற திராணியும் வக்கும் திமுகவுக்கு இல்லை என்பது அம்பலமாகிப் போன ஒன்று.
ஸ்டெர்லைட் எதிர்ப்பில் திமுக
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவின் அர்த்தமுள்ள பங்களிப்பு என்ன தெரியுமா? எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ கீதாஜீவன் கூட போராட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார் என்பதுதான் திமுக தலைமையின் பதில். அங்கே கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்து விழுந்தார்கள்... எங்கள் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார் என்கிறது திமுக தலைமை. இதுதான் திமுகவின் லட்சணம்.
திமுகவையும் வெறுக்கும் மக்கள்
மக்களின் கோபம் அதிமுக, பாஜக மீது மட்டுமல்ல. எதையுமே சாதிக்க இயலாத திமுக மீதுதான் அதிகம் என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள தயாராக இல்லை. பெயருக்கு ஒரு அனைத்து கட்சிக் கூட்டம், ஒப்புக்கு 4 தீர்மானங்கள், ஒப்பனைக்கு ஒரு ஆர்ப்பாட்டம், வக்கனைக்கு ஒரு எகத்தாள பேச்சு.. இதை யாரும் எதிர்பார்க்கலை.
அமைதி காக்கிறதே திமுக ஏன்?
இதோ 12 அப்பாவி மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள்... இனியும் ஏன் இந்த திமுக அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. இதோ நாங்கள் 89 எம்.எல்.ஏக்கள், கூண்டோடு ராஜினாமா செய்கிறோம்.. தமிழகம் தேர்தலை சந்திக்கட்டும் என அறைகூவல் விடுத்திருக்க வேண்டாமா.. இன்னும் ஏன் ரஜினி முருகன் படத்தில் வரும் அந்த மூவர் போல வாய் பொத்தி பாயிண்ட் வரட்டும் என காத்திருக்கிறது திமுக..?