ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்ட திமுக, ஆர்.கே.நகரில் அடக்கிவாசிப்பது ஏன்?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக இருந்த அதிமுகவின் வெற்றிவேல், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாவை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதா, இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
கருணாநிதி காரணம்
இந்நிலையில் இத்தேர்தலில் திமுக போட்டியிடாது என்று அதன் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். நீதித்துறை, தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குமிக்கவர் ஆட்சி நடைபெறுவதால், போட்டியிடவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
மானம் காத்த ஸ்ரீரங்கம்
ஆனால், ஜெயலலிதா தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக உள்ளிட்ட போட்டியிட்ட பிற கட்சிகள் டெபாசிட்டை இழந்தபோதிலும், திமுகவுக்கு டெபாசிட் மிஞ்சியதுடன், கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதிமுக வெற்றி பெற்றது.
அதிமுக கோட்டை
இந்நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிடாமல் இருக்க திமுக முடிவெடுக்க கருணாநிதி கூறியதை தவிர்த்த வேறு சில காரணங்களும் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சென்னை நகரம், திமுகவின் கோட்டையாக இருந்த நிலை மாறி படிப்படியாக அதிமுகவின் வசமாகிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அது அப்பட்டமாக தெரிந்தது. கருணாநிதியே, சென்னையைவிட்டுவிட்டு தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் இருந்துதான் போட்டியிட்டார்.
பொதுத்தேர்தல் நோக்கம்
ஆர்.கே.நகரில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இயல்பாகவே, இது ஜெயலலிதாவுக்கு சாதகமாக மாறும் என்பதும் திமுகவின் பார்வையாக உள்ளது. இதைதவிர, எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று இருக்கும் நிலையில், ஆர்.கே.நகரில் தோல்வியடைவது திமுக தொண்டர்களை சோர்வடைய செய்துவிடும், நம்பிக்கையை குலைத்துவிடும் என்பதும் திமுக தலைமையின் பார்வையாக உள்ளது. எனவே அரசியல் தளத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப்போகாத இந்த தொகுதி தேர்தலில் போட்டியிட்டு பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கோட்டைவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம் திமுக.