செந்தில் பாலாஜி ரெய்டு.. மாட்டிய "மைதிலி" வளைத்து வளைத்து கேள்வி கேட்ட ஐடி அதிகாரிகள்.. யார் இவர்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக சோதனை நடக்கும் நிலையில் மைதிலி என்பவரிடம் ஐடி அதிகாரிகள் கடுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்படுகின்றன.
அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
இப்போதும் கூட கிட்டத்தட்ட 200 இடங்களில் ரெய்டு நடக்கிறது. 5வது நாளாக இன்று சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. . 5வது நாளாக சோதனை நடக்கும் நிலையில் மைதிலி என்பவரிடம் ஐடி அதிகாரிகள் கடுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருமான சங்கரானந்தா வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். அதேபோல் திமுக நிர்வாகியும், கணக்காளருமான மைதிலி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இவரும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என்பதால் அவரிடமும் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.
இவர் சமீபத்தில் செந்தில் பாலாஜி மூலம் திமுகவில் இணைந்தார். பாஜக மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி வினோ திமுகவில் இணைந்தார். 1999ல் இருந்து பாஜகவில் உறுப்பினராக இருந்தவர் மைதிலி வினோ. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் செந்தில் பாலாஜியுடன் ஆலோசனை செய்ததாகவும், திமுகவில் இணைய போவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கட்சி விதிகளை மீறியதாக பாஜகவில் இருந்து மைதிலி வினோ நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மைதிலி வினோ திமுகவில் உடனே இணைந்தார். இந்த நிலையில்தான் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ரெய்டு ஏன்?
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.