நீக்கப்பட்டவர்கள் திரும்புகிறார்கள்.. திமுகவில் நடப்பது என்ன.. "ஸ்மார்ட்" ஸ்டாலின்.. பரபர பின்னணி
முன்னாள் திமுக நிர்வாகிகள் ஏன் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்?
Recommended Video
சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மு.க.ஸ்டாலின் கட்சியில் சில அதிரடிகளை காட்டி வருகிறார்.
அதன் முதல்கட்டமாக கட்சியில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் தன்னுடன் சேர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை மீண்டும் திமுகவில் சேர்த்து கொண்டார். நெல்லை மாவட்டத்தின் முக்கிய புள்ளியான கருப்பசாமி பாண்டியனுக்கும் முறைப்படி அழைப்பு விடுத்து தன்னுடன் இணைத்து கொண்டுள்ளார்.
மாவட்ட மக்கள் மரியாதை
முல்லைவேந்தனை பொறுத்தவரையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம், ஓய்வூதிய திட்டங்களை ஏராளமாக அறிவித்தனர். ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள் அமைய காரணமாக இருந்தார். இவர்மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டு கட்சியை விட்டு அனுப்பிவிட்டாலும், இவர் மீது திமுகவின் சில மூத்த தலைவர்களுக்கும் மாவட்ட மக்களுக்கும் தனி பிரியம் நீடித்து வந்தது. இவர் தேமுதிகவிற்கே சென்றாலும் யாரும் இவரை முழுவதுமாக வெறுத்து ஒதுக்க விரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கருப்பசாமி பாண்டியன்
அதேபோல கருப்பசாமி பாண்டியனை பொறுத்தவரை, நெல்லையில் அதிமுக, திமுக என இரண்டிலுமே கோலோச்சிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர். திமுகவில் இவரது பங்கு அளப்பரியது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் இவரையும் ஸ்டாலின் உள்ளே இழுத்து போட்டுள்ளார்.
அழைக்க காரணங்கள்?
இப்படி பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் அழைப்பதன் காரணங்கள்தான் என்னென்ன? இத்தனைக்கும் நீக்கப்பட்டவர்களும், பிரிந்தவர்களும் பல அதிருப்தியால்தான் குறைகளை கூறி வெளியேற்றப்பட்டவர்கள். ஆனாலும் குறை கண்ட இவர்களை ஸ்டாலின் தன் பக்கம் இழுக்க முக்கிய காரணங்கள் மூன்று.
முதல் காரணம்
முதல் காரணம்: ஸ்டாலின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவுடனேயே எல்லோரும் விரும்பியது, இவரும் கருணாநிதிபோல செயல்பட வேண்டும் என்றுதான். கருணாநிதியின் ப்ளஸ் பாயிண்ட்டே, கழகத்திலிருந்து பிரிந்தவர்களை, விலகியவர்களை மீண்டும் தன்னுடன் இணைத்து கொள்வதுதான். அதற்காக பல முயற்சிகளையும் எடுத்து அரவணைக்க முற்படுவார். அது தொண்டர்களாக இருந்தாலும் சரி, அவர்களை கழகத்துடன் இணைப்பதற்கான வழிமுறைகளை எல்லாம் கையாள்வார். எனவே கருணாநிதி மாதிரியான ஒரு அணுகுமுறையை ஸ்டாலினும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு மதிப்பளித்தும், முக்கியத்துவம் அளித்தும்தான் ஸ்டாலின் கருணாநிதியின் இந்த பாணியை கையில் எடுத்துள்ளார்.
இரண்டாவது காரணம்
இரண்டாவது காரணம்: தனது தலைமையில் கட்சியை பலப்படுத்துவது... மூத்த தலைவர்களும், அனுபவம் வாய்ந்த மாவட்ட செயலாளர்களும் இருந்தால் அது கட்சிக்கு உரமாக இருக்கும் (தனக்கும் வேலை ஈசியாகும்) என்று நினைக்கிறார். அதற்காக இப்போதைக்கு மாவட்டங்களில் நல்ல பெயரை பெற்றிருப்பவர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களுமான முல்லைவேந்தன், கருப்பசாமிக்கு (இருவருமே திட்டமிடுதலில் கில்லாடிகள்) முதல்கட்டமாக அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்றார்போல் இருவருமே அந்த அழைப்பை ஏற்று பகிரங்கமாக தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
மூன்றாவது காரணம்
மூன்றாவது காரணம்: விலக்கப்பட்ட இதுபோன்ற மூத்த தலைவர்கள் அழகிரி பக்கமோ அல்லது வேறு யாரிடமோ (ரஜினி தரப்பு இதுபோன்றவர்களை இழுக்க முயற்சிப்பதாக ஒரு பேச்சு உள்ளது) சாய்ந்துவிடக்கூடாது என்ற பயமும் ஸ்டாலினுக்கு உள்ளது. அழகிரி என்றில்லை பாஜக உள்ளிட்ட வேறு யாரிடமும் சேர்ந்துவிட்டால் தமது கட்சிக்கு அது தொய்வாக போய்விடும் என்று ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது. இப்போது முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் என்பது ஆரம்ப அறிகுறிதான். இதேபோல பிரிந்து சென்ற வேறு சில முக்கிய நிர்வாகிகளும், கட்சியின் செயல்திறன்மிக்க உறுப்பினர்களும் மீண்டும் திமுகவிற்கு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
அழகிரி அவ்ளோதானா?
எப்படிப்பார்த்தாலும் கருணாநிதியிடம் இருந்த அதே அணுகுமுறை தற்போது ஸ்டாலினிடமும் தென்பட துவங்கியுள்ளது திமுக தொண்டர்களுக்கு புது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் ஸ்டாலின் யாரை கூப்பிட்டாலும் கூப்பிடுவார், அழகிரியை மட்டும் எப்பவுமே கூப்பிடவே மாட்டார் என்கிற உறுதிபிடிப்பும் கூடவே தொக்கி நிற்பதையும் உணர முடிகிறது.