பாமகவில் மாற்றம்.. முன்னேற்றம்.. நடிகருக்கு பதவி!
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ராமதாஸ் நிலைப்பாடு என்ன?
Recommended Video
சென்னை: பாமகவின் அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கிய சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. அதுதான் நடிகர் ரஞ்சித்திற்கு முக்கிய பொறுப்பினை வழங்கியதுதான்.
டாக்டர் ராமதாஸ்!! மொழிக்காக உழைத்து கொண்டிருப்பவர்... உழைக்கும் மக்களுக்காகவும் பாடுபடுபவர். அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும், டாக்டர் பட்டமும் பெற்றவர்! மது, போதை போன்ற கலாச்சார சீரழிவுக்கு எதிராக உறுதியாகவும் உடும்பு பிடியாகவும் தற்போது வரை இருப்பவர். சமீபத்தில்கூட தன் கட்சியை சேர்ந்தவர் போதை சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தவர்!!
மறைமுக சாடல்கள்
கடந்து வந்த பாதையில், பாமக-அதிமுகவிற்கும், பாமக-திமுகவிற்கும் பலமுறை அரசியல் உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. அந்த உரசல் ஊடலாக உருவாகி கடைசியில் மோதலும் வளர்ந்திருக்கிறது. நிறுவனர் ராமதாஸ் அப்போதைய காலக்கட்டங்களில் எல்லாம் இரு கட்சிகளையும் பகிரங்கமாகவே விமர்சனம் செய்து வந்திருக்கிறார். ஆனால் இந்த விமர்சனங்களை டாக்டர் ராமதாஸ் கூட்டணியில் இருந்தபோது கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் நேருக்கு நேர் விமர்சனம் செய்ததில்லை. மாறாக, பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளில்தான் கடுமையாக சாடி வந்தார்.
[திருவாரூரில் களம் இறங்குகிறாரா டி.ஆர்.. "அவருடன்" கை கோர்க்க போகிறாராமே!!??]
வன்னியர்கள் ஓட்டுக்கள்
எப்படி கலாச்சார சீரழிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என பாமக கூறிவந்ததோ அதேபோலதான், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும் கூறிவந்தது. ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கும்போதுகூட வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் ராமதாஸ் திட்டினார். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு எதற்கு வர வேண்டும் என்று சாடினார். அதனாலேயே தேமுதிக எனும் கட்சி ஆரம்பிக்கப்பட்டது பாமகவுக்கு எதிரானது என்றுகூட பேசப்பட்டது. அதற்கேற்ற மாதிரியே, வன்னியர்களின் ஓட்டுக்கள் முதல்முறையாக பாமகவிலிருந்து தேமுதிகவிற்கு வந்து விழுந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ரஜினிக்கும் எதிர்ப்புதான்
இப்படித்தான் ரஜினிக்கும் கூறினார். போன ஜனவரி மாதம்கூட ஒரு பேட்டியில், "எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது. அவர்களின் அரசியல் கனவு, வெறும் கனவாக தான் இருக்கும். தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நடிகரின் அரசியலை மக்கள் ஏற்கமாட்டர்கள்" என்று டாக்டர் ராமதாஸே கூறினார்.
பச்சைக் கொடியா?
ஆனால் தற்போது பாமகவில், நடிகர் ரஞ்சித்திற்கு துணை தலைவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பகிரங்கமாக அறிவித்தது பாமக நிறுவனர்தான்!! அதுவும் மிகப்பெரிய பொறுப்பான பாமகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை பொறுத்தவரை, ராமதாஸ் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறி விட்டாரா, அல்லது நடிகர் ரஞ்சித்தை அரசியலில் இணைத்து கொள்வதன் மூலம் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்று ராமதாஸ் பச்சைக் கொடி காட்டுகிறார் என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை.
மாற்றம்... முன்னேற்றம்
ஆனால், ஆரம்பத்தில் பல்வேறு தரப்பினர், பல்வேறு இனத்தினர் இருந்த கட்சிதான் பாமக. அதனால்தான் விறுவிறுவென தமிழகத்தில் வளர்ந்து வந்த கட்சியாக விஸ்வரூபமெடுத்தது. பின்னர் நாளடைவில் அது வன்னியர்களுக்கான கட்சி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது. இப்போது ரஞ்சித் கட்சியில் இணைந்ததன்மூலம் மாற்று கட்சியினரும் இணையும் ஒரு இன பேதமற்ற கட்சி என்ற பெயர் துளிர்விட ஆரம்பித்துள்ளது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நல்ல விஷயம்தான்!!