மிரட்டியதாக சொல்லும் தேர்தல் அதிகாரி... விஷால் மீது புகார் தெரிவிக்காதது ஏன்?
நடிகர் விஷால் தேர்தல் அதிகாரியை மிரட்டி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : மிரட்டியதாலேயே வேட்பு மனுவை ஏற்றுகொள்வதாக தேர்தல்அதிகாரி கூறி இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அப்படி மிரட்டப்பட்டிருந்தால் அது குறித்து அதிகாரி புகார் அளிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆர்கே நகர் தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா புகார் அனல் கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய நடிகர் விஷாலின் அரசியல் அனல் தான் பறந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று களத்தில் இறங்கியவருக்கு வேட்பு மனு தாக்கலிலேயே அடி விழுந்துவிட்டது.
முன்மொழிந்து கையெழுத்து போட்ட இரண்டு பேர் பிரல் சாட்சியாக மாறியதால் விஷாலுக்கு தலைவலி ஏற்பட்டது. விஷாலும் தன்னால் முடிந்தவரை முட்டி மோதி குட்டிக்கரணமெல்லாம் போட்டுப் பார்த்தார். ஆனால் கடைசி வரை அவருடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
காணவில்லை என்று சொன்ன விஷால்
2 பேரை ஆஜர்படுத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவர்களைக் காணவில்லை என்று வெறும் கையோடு தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்பு ஆஜரானார் நடிகர் விஷால். கடைசியாக தன்னுடைய மனு ஏற்கப்படாத சோகத்தோடு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
மிரட்டியதாக புகார்
அப்போது தாங்கள் மிரட்டியதாலேயே இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்ததாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி கூறுவதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி அந்த 5 நிமிட வீடியோவை போட்டுக் காட்டுங்கள் என்று கதறுவது போல நடிகர் விஷாலும் தேர்தல் அதிகாரியுடன் நாங்கள் பேசும் வீடியோ ஆதாரம் அரசிடம் உள்ளது அதை போட்டுப் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்.
சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம்
ஒரு வேலை நடிகர் விஷால் தேர்தல் அதிகாரியை மிரட்டியது உண்மையானால் அவர் மீது அதிகாரி வேலுச்சாமி புகார் அளிக்காதது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசு அதிகாரியை பணியை செய்ய விடாமல் தடுத்து மிரட்டும் யாராக இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.
ஏன் முறையிடவில்லை?
அப்படி இருக்கையில் தேர்தலை நடத்தும் அதிகாரியை மிரட்டியதாக சொல்லும் குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதிலும் அவர் ஏன் இது குறித்து காவல்துறைக்கோ தேர்தல் ஆணையத்திடமோ முறையிடவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.