ரூபாய் மாற்ற அறிவிப்பு: கல்யாணத்துக்கு மட்டும் விதிவிலக்கு... சரி 'காரியத்துக்கு' என்ன செய்யறதாம்?
வங்கிகளில் திருமணத்துக்கு பணம் எடுக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு சடங்குகளுக்கும் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மும்பை : மும்பை கஞ்சுமார்க் பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த செய்தி வெளியானதால், திருமணத்தை போன்று இறப்புக்கும் வங்கிகளில் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருப்பவர், பேராசிரியர் அமர்நாத் அகர்வால். இவரது மனைவி திரெளபதி கடந்த 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அமர்நாத் அவரது இறுதிச் சடங்குகளை செய்ய உடனடியாக பணம் கிடைக்காமல் தவித்தார்.
பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அமர்நாத் தனது மனைவியின் இறுதிச்சடங்கை முடித்தார். இந்நிலையில் 12ஆம் நாள் காரியத்துக்கு திட்டமிட்டுள்ள அவர், அதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கிறார்.
ஆனால் வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், காரியத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
மேலும் திருமணத்துக்கு வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போல் இறப்புக்கும் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாட்டை தளர்த்தி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனது தம்பியின் உடலை பெற பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அவதிக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.