கருணாஸ் கைது சரி... எச் ராஜா மட்டும் கைது செய்யப்படாததன் பின்னணி என்னவோ?
சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்டது சரி, எச் ராஜா மட்டும் இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காவல் துறை, நீதிமன்றம் மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்று எச் ராஜாவும், எம்எல்ஏ கருணாஸும்தான். இவர்களில் எச் ராஜா நீதிமன்றத்தையே கடுமையாக விமர்சனம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க வேண்டும் என அடம் பிடித்தார் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா.
ஹைகோர்ட் உத்தரவு
இதைத் தொடர்ந்து போலீஸாருக்கு அவமானம் இல்லையா, வெட்கம் இல்லையா என கேட்டுள்ளார். மேலும் மற்றவர்களின் மதவழிப்பாட்டு தலத்துக்கு அருகே இன்னொரு மதத்திற்காக மேடை அமைக்கக் கூடாது என்பது ஹைகோர்ட் உத்தரவு என்று போலீஸார் கூறினர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஆனால் எச் ராஜாவோ ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்று கூறியதுடன் கடுமையான கெட்ட வார்த்தையால் விமர்சனம் செய்து பேசினார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு பெயரில் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன.
புலிப்படை
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கருணாஸ் மற்றொரு ஏழரையை கூட்டிவிட்டார். கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவரும் திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ் முதல்வரை தான் அடித்து விடுவேன் என்பதால் அவருக்கு என் மீது பயம் என்று அசால்ட்டாக கூறினார்.
கொலை செய்வோம்
கொலை கூட செய்யுங்கள். ஆனால் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். போலீஸ்காரர்களுக்கு ஒருவரை அடிக்க போதை ஏற்றினால்தான் தைரியம் வரும். ஆனால் நாங்கள் பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என்றார்.
கொலைவெறி
வன்முறையையும் கொலைவெறியையும் தூண்டும் வகையில் இவரது பேச்சு இருந்தது. இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். காவல் துறை மற்றும் முதல்வருக்கு எதிராக பேசிய கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது எச் ராஜா ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
குற்றவாளிகளுக்கும் ஒரு பயம்
எச் ராஜா பாஜகவின் மூத்த நிர்வாகி. அவரை கைது செய்தால் தேவையில்லாமல் ரெய்டுகள், சோதனை என அதிரடிகளை சந்திக்க நேரிடும் என்பதாலேயே அவர் கைது செய்யப்படவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சட்டம் என்பது அனைவருக்கும் சமமே. நீதிமன்றத்தையே அவதூறாக பேசிய எச் ராஜாவும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். இல்லாவிட்டால் நாளை நீதிமன்றங்களின் மீது மக்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஒரு பயம் இல்லாமல் போய்விடும் என்பது நிதர்சனம்.