"அம்மா"வுக்கு உடம்பும், மனசும் சரியில்லையாமே.. அதான் வெளியில் தலை காட்டவே இல்லையாமே??
சென்னை: உடல் நலக்குறைவு, நீதிபதி குமாரசாமி தீர்ப்பை முழுமையான மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலை, அதை நம்பி முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஆகியவற்றால் ஏற்பட்ட மனக் கவலை ஆகியவை காரணமாகவே தீர்ப்புக்குப் பிறகும் கூட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
கடைசியாக ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகில் நடமாடியது 2014, அக்டோபர் 18ம் தேதிதான். அன்றுதான் அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்து சேர்ந்தார். மாலையில் வந்து சேர்ந்த அவர் இரவு வீடு போய்ச் சேர்ந்தார். அதன் பிறகு அவர் தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இதுகுறித்து 'தி நியூஸ்மினிட்' இணையதள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இடையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை வீடு தேடிப் போய்ச் சந்தித்தார். ஸ்ரீரங்கம் வேட்பாளராகப் போட்டியிட்ட வளர்மதி போய்ப் பார்த்தார். தேவர் ஜெயந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் பிறந்த, நினைவு தினங்களின்போது தனது வீட்டிலேயே புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் மட்டும் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் மே 11ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பரித்தனர். சந்தோஷித்தனர், ஆனந்தத்தில் கூத்தாடினர். போயஸ் கார்டன் இல்லம் முன்பு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டனர். அம்மாவைப் பார்க்க ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அம்மாவோ முகத்தைக் காட்டவே இல்லை. வெளியில் வரவில்லை.
அன்றே முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் போயஸ் கார்டன் சென்றனர். ஆனால் ஜெயலலிதா அவர்களைப் பார்க்கவில்லை. இன்டர்காமில் பேசியதோடு திரும்பினர். செவ்வாய்க்கிழமையும் அதேபோல சென்றனர். அப்போதும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி அஷ்டமி, நவமி என்பதால் ஜெயலலிதா இந்த இரண்டு நாட்களாக யாரையும் பார்க்கவில்லை என்று கருதப்பட்டது.
ஆனால் நேற்று எந்த திதியும் கிடையாது. ஆனால் நேற்று போயஸ் கார்டனுக்குப் போயிருந்த முதல்வர், 19 அமைச்சர்களை ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லையாம். வழக்கம் போல இன்டர்காமில்தான் பேசினாராம். அப்போது அவரது குரல் கம்மியபடி இருந்ததாக கூறுகிறார்கள்.
அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பயப்படும் படியான உடல் நலக் குறைவு இல்லை என்றும் கூறுகிறார்கள். அதேசமயம், குமாரசாமி தீர்ப்பால் முதலில் மகிழ்ந்த ஜெயலலிதா தீர்ப்பின் குளறுபடியால் பெரும் அப்செட்டாகியுள்ளார் என்கிறார்கள். எனவேதான் அவர் உடனடியாக முதல்வர் பதவியில் அமர விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக அனைத்துத் தடங்கலையும் தகர்த்து விட்டு, தெளிவான சூழல் உருவான பின்னர் ஆட்சியில் அமர அவர் விரும்புகிறாராம்.
இதனால்தான் யாரையும் அவர் பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் சட்ட ரீதியான குழப்பங்கள் தீரும் வரை அவர் வெளியில் வர மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது அவர் தனது வக்கீல்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தீர்ப்பு நகலை அவரே படித்துப் பார்த்து வருகிறார்.
தீர்ப்பு சாதகமாக வந்தும், சட்ட ரீதியான குளறுபடிகள் காரணமாக, அதை ஸ்வீட் எடுத்துக் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு முழு சந்தோஷம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.