உள்ளாட்சி தேர்தல் வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு ஹைகோர்ட் தடை விதிக்க மறுத்தது ஏன்?- திமுக வக்கீல்
சென்னை: தேர்தல் ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்தது ஏன் என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். மாநில தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர் எனவும், தனி நீதிபதி சுட்டிக்காட்டியதை முன்வைத்து வாதாடினோம் என்றும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
திமுக தொடர்ந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், தேர்தல் தொடர்பான அரசாணைகள் அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வெளியிட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 31க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்காக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் "உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் மீதான விசாரணை வரும் அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை நீதிமன்றம் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கோரியது. மேலும் தேர்தல் ஆணையம் கோரியபடி தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க நீதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார். அக்டோபர் 4ம் தேதி நீதிபதி கிருபாகரன் உத்தரவை அடுத்து தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டன.
மேலும் புதிதாக அறிக்கை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரினோம் எனவும் அவர் கூறியிருந்தார். மாநில தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர் எனவும், தனி நீதிபதி சுட்டிக்காட்டியதை முன்வைத்து வாதாடினோம் என்றும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்து விட்டன என்றும் வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.