ஒரு நல்ல நாள் பார்த்து டிடிவி அண்ணனை சந்தித்தேன் - எம்எல்ஏ பிரபு
மக்கள் ஆதரவு பெற்ற ஒரே தலைவர் டிடிவி தினகரன்தான் என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுகவை வழி நடத்த டிடிவி தினகரனாலும், சசிகலாவினால் மட்டுமே முடியும் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான பிரபு திடீரென தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினகரனை சந்தித்தது ஏன் என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மக்கள் சேவை செய்ய ஆசை
செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய அதிகம் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதன் காரணமாகவே தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன், யாரைப்பற்றியும் குறை சொல்லவோ, குற்றம் சொல்லவோ வரவில்லை.
முதல்வருக்கு தெரியும்
கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். இது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அமைச்சர் சிவி சண்முகத்துடன் எந்த பிரச்சினையும் இல்லை.
அண்ணனுக்கு ஆதரவு
மக்களுக்கு சேவை செய்ய முடியலையே என்ற மனக்குறை எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அண்ணன் டிடிவி தினகரனிடம் பேசினேன். ஒரு நல்ல நாள் பார்த்து வரச்சொன்னார். நான் இன்று அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன்.
வழி நடத்தும் தலைவர்
டிடிவி தினகரன் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போதே அனைவருக்கும் தெரியவந்து விட்டது. கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் தகுதி டிடிவி தினகரனுக்கும், சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது என்றும் பிரபு எம்எல்ஏ கூறினார். வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்று கூறி அசத்தினார் பிரபு.
தினகரன் ஆதரவாளர்கள்
டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு எம்எல்ஏ பிரபு தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரபு பேட்டி கொடுத்த போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கை தட்டி ரசித்தனர்.