பதவியை தேடி செல்கிறேனா? விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி பரபர விளக்கம்!
புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்துவந்த ஆணைய தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்துவந்த ஆணைய தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக்கு தடை கோரி, முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ரகுபதி கமிஷனின் விசாரணைக்கு, 2015-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இடைக்கால தடையை நீக்க கோரி, தமிழக அரசு கூடுதல் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வகையில், தமிழக அரசு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சலுகைகள் நிறுத்தம்
மேலும், ரகுபதி ஆணையத்துக்கு வழங்கக் கூடிய சலுகைகள் அனைத்தையும் நிறுத்த வைக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆணையிட்டார். புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான விசாரணை ஆவணங்களை, இரண்டு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்கவும் நீதிபதி சுப்பிரமணிம் உத்தரவிட்டார்.
ஆக.3ல் உத்தரவு
மேலும், பங்களாக்களில் இயங்கும் ஆணையங்களை, அரசு கட்டிடங்களுக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்று ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரவிட்டிருந்தார் நீதிபதி சுப்பிரமணியம்.
அரசிடம் கார் ஒப்படைப்பு
இந்தநிலையில், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்து வந்த ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளருக்கு அனுப்பி வைத்தார். விசாரணைக்காக தமிழக அரசு தந்த இன்னோவா கார், விசாரணை ஆவணங்கள் மற்றும் கணினி உள்ளிட்டவற்றையும் நீதிபதி ரகுபதி அரசிடம் ஒப்படைத்தார்.
நீதிபதி விளக்கம்
விசாரணை ஆணையத் தலைவர் திடீரென ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என நீதிபதி ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
தர்மசங்கடம்
இது குறித்து ஆணைய தலைவர் ரகுபதி கூறியதாவது, விசாரணை ஆணையம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஊதியம் பெறாமல்
ஆணையத்துக்கான தடையை நீக்க பலமுறை முறையிட்டும் விசாரிக்கவே இல்லை. மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றி எந்த ஊதியமும் பெறாமல் 45 நாள் விசாரித்து அறிக்கை தந்தேன்.
தொடர விருப்பம் இல்லை
ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடி செல்வதை போல் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். ஆணையத்தில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லாததால் பதவி விலகிறேன். இவ்வாறு நீதிபதி ரகுபதி தெரிவித்துள்ளார்.