கிரானைட் ஊழலை அக்குவேறாக ஆணிவேறாக அம்பலப்படுத்தியதால் சகாயத்துக்கு கொலை மிரட்டல்!
கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தியதால் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் ஊழலை உரிய ஆதாரங்களுடன் மிக விரிவாகவே அம்பலப்படுத்திவிட்டார் என்ற கோபத்தால் சமூக விரோதிகள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரியாக சகாயம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை கிரானைட் குவாரிகளில் இரவு பகலாக ஆய்வு நடத்தினார் சகாயம்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் சுமார் 600 பக்க அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த பிரதான அம்சங்கள்:
600 பக்கம்
600 பக்கங்களில் 66 அத்தியாயங்களைக் கொண்டது இந்த அறிக்கை. இது 2015-ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிதைந்த தொல்லியல் சின்னங்கள்
கிரானைட் கற்களுக்கான விவசாய நிலங்கள், நீர்நிலைகள், தொல்லியல் சின்னங்கள், கோயில்கள் சிதைக்கப்பட்டன. வீடுகள் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு கேட்டவர்களின் இடங்களையும் இந்த கும்பல் ஆக்கிரமித்தது.
அழிந்த கல்வெட்டுகள்
திருவாதவூர், கீழவளவு, சமணர்குகைகள், கல்படுக்கைகள் ஆகியவற்றுடன் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் வெட்டி நாசப்படுத்தியது கிரானைட் கும்பல். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனர்.
அதிகாரிகள் உடந்தை
இந்த கிரானைட் மோசடி கும்பலுக்கு அனைத்து மட்டத்திலும் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். துறைமுக அதிகாரிகள், கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த ஏற்றுமதி மோசடி அரங்கேறியது. வங்கிகளும் இந்த கும்பல்களுக்கு உடந்தையாகவே செயல்பட்டது என்கிறது சகாயம் அறிக்கை.
விரக்தியில் மிரட்டல்
இதனால்தான் கிரானைட் கும்பல் அதிர்ந்து போய் சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. தற்போது கொலை மிரட்டல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.