திடீரென மாற்றப்பட்ட உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு!!
சென்னை: தமிழக உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென மாற்றப்பட்டு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த கண்ணப்பன் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஜூலை 31-ந் தேதியன்று புதிய உளவுத்துறை ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் 6 மாதங்கள் கூட அப்பதவியில் நீடிக்கவில்லை.
திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் மாற்றப்பட்டு புதிய உளவுத்துறை ஐ.ஜியாக திருச்சி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திமுகவுடன் மதிமுக நெருங்கிய நிலையில் உளவுத்துறை அசைன்ட்மெண்ட்படிதான் மக்கள் நலக் கூட்டணி உருவானதாக கூறப்படுவது உண்டு. அதேபோல் திமுகவுடன், தேமுதிக நெருங்கிவிடக் கூடாது என்பதிலும் ஆளும் அதிமுக உறுதியாக உள்ளது. இதற்கேற்ப உளவுத்துறையும் காய்நகர்த்தி வருகிறது.
ஆனால் இந்த காய்நகர்த்தல்களை தகர்த்து திமுக- தேமுதிக நெருங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உளவுத்துறையின் தோல்வியாக அதிமுக மேலிடம் கருதுகிறதாம். இருந்த போதும் இதுமட்டுமே காரணமில்லை... வழக்கம் போல காவல்துறை உயர் அதிகாரிகளிடையே உள்ள ஈகோ யுத்தத்தில்தான் பலியாடாக்கப்பட்டார் டேவிட்சன் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறை முதன்மை அதிகாரிக்கும் டேவிட்சனுக்கும் இடையே வெடித்த ஈகோ மோதல் 6 மாதங்களாக 'அங்கிட்டு இங்கிட்டு' என நகர்ந்து கொண்டிருந்ததாம்.. அதுவும் மேலிடத்தில் யார் யாரைப் பற்றி அதிகம் போட்டுக் கொடுப்பது என்பதுதான் பிரதான வேலைகளில் ஒன்றாக இருந்ததாம்.. இதற்காக ஏகத்துக்கும் இருதரப்பும் செல்போன்களை டேப் செய்திருக்கின்றனர்..
இப்படி டேப் செய்யப்பட்ட செல்போன்கள் சில மேலிடத்துக்கு நெருக்கமானவர்களுக்கும் நெருக்கமானவர்களாம். இப்படி பல்வேறு பிரச்சனைகளில் டேவிட்சன் மீது கோபத்தில் இருந்த முதல்வர் ஒட்டுமொத்தமாக அவரை தூக்கிவிட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைத்துவிட்டாரம்..
அதுவும் தேர்தல் நெருங்கும் நிலையில் அக்கப்போரில் சிக்காதவராக இருக்க வேண்டும் என்பதற்காக சத்தியமூர்த்தியை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.