அதுதான் தமிழர்களின் சாபக்கேடு!- மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலை குறித்து கருணாநிதி
சென்னை: மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அது தொடர்ந்து இலங்கை அரசை ஆதரிப்பது தமிழர்களின் சாபக்கேடு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகத் தொடர்ந்து சிங்கள அரசு நடந்து கொண்ட போதிலும், இந்திய அரசு, அது எந்த அரசாக இருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்களே?
பதில்: அதுதான் நம்முடைய சாபக்கேடு போலும். இலங்கைத் தீவில், சிங்களவர் தவிர மற்ற இனத்தவர் மீதும், புத்த மதத்தினர் தவிர மற்ற மதத்தவர் மீதும், கடுமையான காழ்ப்பு உணர்ச்சியை உருவாக்கி, அங்கே ரணகளம் ஏற்படக் காரணமாக இருந்தவர் தர்மபாலா. அனகாரிகா தர்மபாலா என்ற சிங்கள, புத்த தேசியவாதியாகக் கருதப்படுபவர், இலங்கையில் தெரவதா பவுத்தம் என்ற சிங்கள பவுத்த முறை பரவக் காரணமாக இருந்தவர், இந்துக்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரை வற்புறுத்தி பவுத்த மத மாற்றம் செய்தவர், இந்து மதமும், கிறித்தவ மதமும் சமுதாயத்தில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்கும் பொறுப்பு என்று அறிவித்து, தன்னுடைய பிற மதச் சகிப்புத்தன்மை இன்மையை பிரகடனப்படுத்தியவர் இவர்.
இந்த தர்மபாலாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. எங்கே தெரியுமா? இந்தியாவில், அதுவும் நம்முடைய குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜியே விழாவிலே கலந்து கொண்டு, இந்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையிலே வெளியிட்டிருக்கிறார்.
அது மாத்திரமல்ல; இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு "பாரத ரத்னா" விருது தர வேண்டுமென்று, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்கிறார், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர். மேலும் சீனாவின் அணுசக்தியிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினை கொழும்பு துறைமுகத்திலே நிறுத்திட இந்திய அரசு தன்னுடைய கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த போதிலும், கடந்த செப்டம்பரில் இலங்கை அரசு அனுமதித்தது.
மேலும் தற்போது சீனாவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினை இலங்கையில் பாக். நீரிணைக்கு எதிர்ப்பகுதியில் நிறுத்திடவும் இலங்கை அரசு அனுமதித்துள்ளது. விரைவில் இந்த இரண்டாவது போர்க் கப்பலும் இலங்கையில் நிறுத்தப்படப் போவதாகச் செய்தி வந்துள்ளது.
இலங்கைக்கு சீனா 1971-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அளித்துள்ள மொத்த உதவி 5.06 பில்லியன் டாலர் என்றால், 2005-ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் மட்டும் அதாவது ராஜபக்ஷே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இந்த உதவியில் 94 சதவீதம் அளவுக்கு, அதாவது 4.76 பில்லியன் டாலர் சீனாவினால் இலங்கைக்குத் தரப்பட்டிருக்கிறது என்றால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உள்ளார்ந்த நட்பினை, நம்முடைய இந்தியா இன்னமும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது. இலங்கையின் இப்படிப்பட்ட உள்நோக்கத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தான் இந்திய அரசு இலங்கையோடு உறவு கொண்டுள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.