நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி ஐ.டி ரெய்டு பின்னணி- அருண் ஜெட்லியிடம் போட்டுக் கொடுத்தது யார்?
சென்னை: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோரை மையமாக கொண்டு மத்திய அரசின் வருவாய்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு நடத்தப்பட்டதன் பின்னணியில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவரின் சஸ்பெண்ட் திடீரென சஸ்பெண்டு செய்ததாக போர்க்கொடி உயர்த்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தங்ககளின் டெல்லி லாபியை வைத்து அருண் ஜெட்லி மூலமாக இந்த ரெய்டுக்கு தூண்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோரை மையமாக கொண்டு மத்திய அரசின் வருவாய்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதே நேரத்தில், கீர்த்திலால் ஜூவல்லரி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஏன் இந்த திடீர் என்று பலவித கேள்விகள் எழுந்தன.
நத்தம் விஸ்வநாதன்
கடந்த ஆட்சியில் மின் மற்றும் கலால்துறையில் கொடி கட்டிப் பறந்தார் நத்தம் விஸ்வநாதன். மின்சாரக் கொள்முதலில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இதன் எதிரொலியாகவே முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் கனிம வளத்துறையின் அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பழிவாங்கும் செயல்?
தலைமைச் செயலகத்தில் கோலோச்சிய ஓர் அதிகாரியை பழி வாங்கிய செயலை, இதர ஐ.ஏ.எஸ்க.ளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கென தலைமைச் செயலகத்தில தனியாகக் கூட்டம் போட்டுப் பேசினர். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், தற்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் அதற்கு சம்மதிக்கவில்லை.
சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொந்தளித்தனர். தற்போது மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து வருகிறார் சக்தி கந்ததாஸ் ஐ.ஏ.எஸ். இவர் 80ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்
முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 82ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். தலைமைச் செயலாளராக ஞானதேசிகன் பதவியில் இருந்த போது முதல்வரை ஞானதேசிகன் சந்தித்த நிகழ்வுகள் குறைவுதானாம். சரியான விசாரணை நடத்தாமல் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவரை திடீரென சஸ்பெண்டு செய்ததாக அவர்கள் போர்கொடி தூக்கினர். அந்த தரப்பினர்தான் தங்களின் டெல்லி லாபியை வைத்து இந்த ரெய்டுக்கு தூண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒத்துழைக்காத அதிமுக
மத்திய அரசுக்கு தமிழக அரசு மீது கோபம் அதிகமாகவே உள்ளதாம். ரெய்டு என்பது அதன் ஒரு பகுதிதான் என்றும் பாஜக வட்டார தகவல் கூறுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, அ.தி.மு.க அரசின் ஒத்துழைப்பு தேவை என்பதற்காக, கடந்த ஆண்டே தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை ஓராண்டு தள்ளி வைத்தார் அருண் ஜெட்லி. நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி நிறைவேற்றப்படும்போது, தி.மு.க ஆதரவு கொடுத்தது. அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. இதுவும் பாஜக தலைமையின் கோபத்தை அதிகப்படுத்தியதாம்.
அதிமுக விஐபிக்கள்
மத்திய அரசுக்கு தமிழக அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையில் உயர் அதிகாரிகள் மத்தியில் பெரிய ஒரு தரப்பினர் உச்சகட்ட லாபியே செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டம்தான் இந்த ரெய்டு என்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு டென்ஷன் கொடுக்க பயன்படுத்தலாம் என்று நினைத்து அவரது கட்சி வி.ஐ.பிக்கள் பலரது ஃபைல்களை வைத்திருந்தனர்.அவற்றில் மூன்றை மட்டும் இப்போது எடுத்திருக்கிறார்கள்.
அருண் ஜெட்லி சிக்னல்
கடந்த ஆட்சியில் மின்துறையில் நடந்த மெகா ஊழல்களைப் பற்றியும் அதன்மூலம் அ.தி.மு.க.வுச்குச் சென்ற வருமானம் குறித்தும் சில தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேயரின் தொழில்கள் குறித்தும் ஆட்சி அதிகாரத்திற்கு நெருக்கமான கோவை நகைக்கடையின் வருமானம் குறித்தும், புள்ளி விபரங்களோடு வருமான வரித்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் சில அதிகாரிகள். ரெய்டு நடத்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அனுமதிக்காகக் காத்திருந்தனர். ரெய்டு நடத்துவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்' என அருண் ஜெட்லி பச்சைக்கொடி காட்டவே, மளமளவென ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
நத்தம் விஸ்வநாதனுக்குக் குறி
மத்திய வருவாய்துறையினர் குறி வைத்தது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நோக்கித்தான். கடந்த ஆட்சியில் கொடிகட்டிப்பறந்தவர்.
அ.தி.மு.க வி.ஐ.பிக்களில் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர். அவரின் அசுர பொருளாதார வளர்ச்சி பற்றி அவரின் அரசியல் எதிரிகள் ஆதாரங்களுடன் ஐ.டி. துறைக்கு அனுப்பினார்களாம். இப்படியாக அ.தி.மு.க நோக்கி நடத்தப்பட்ட ரெய்டு இது. இதுமாதிரி குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையையும் ரெய்டில் சேர்த்துக்கொண்டார்கள்.
மெயின் பிக்சர் இனிதான்
இப்படியொரு அதிரடி சோதனையை அ.தி.மு.க மேலிடம் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் கோலோச்சும் ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களின் மறுபக்கம் குறித்து, வருமான வரித்துறைக்கு விலாவாரியாக சில குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்று நடந்தது சும்மா டிரெய்லர்தான் வரும் நாட்களில் அ.தி.மு.க.வின் மிக முக்கியமான புள்ளிகள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட உள்ளது என்று வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைலரே இப்படி அதிருதே? அப்போ மெயின் பிக்சர்? அதிமுக தலைமை அதிரும் அளவுக்கு சோதனைகள் நடக்கும் என்கின்றனர்