தமிழகத்தில் மீண்டும் அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள்.. பரபரப்பு பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள ஐடி ரெய்டு கலாசாரத்தின் பின்னணி என்ன என்று பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் வருமான வரித்துறை ரெய்டு என்பது அன்றாட நிகழ்வாக மாறியது. இதன் நீட்சி, ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, தமிழக தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தும் அளவுக்கு போனது.
தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவும் இதில் தப்பவில்லை. மத்திய அரசுக்கு எதிராக ராமமோகனராவ் நேரடியாக குற்றம்சுமத்தினார். ஜெயலலிதா இருந்திருந்தால், மத்திய அரசுக்கு இந்த துணிச்சல் வந்திருக்காது என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
பிரேக்கிங் செய்திகள்
ஆனால், இதன்பிறகு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திலும் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தன. டிடிவி தினகரன் இடங்களும் தப்பவில்லை. தினமும் காலை முதல் மாலை வரை மீடியாக்களின் பிரேக்கிங் நியூசாக மாறியிருந்தது ஐடி ரெய்டுகள். ஏதேதோ பறிமுதல் என செய்திகள் கசியவிடப்பட்டன. ஆனால், இதுவரை எந்த ரெய்டு தொடர்பாகவும், யார் மீதும் நடவடிக்கை என்பது ஆரம்பிக்கப்படவில்லை. ஐடி ரெய்டுகளுக்கு பிறகு நடவடிக்கைகளுக்கு சற்று காலம் பிடிக்கும்தான். ஆனால், விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பதை கூட வெளியிடாமல் ரகசியம் காப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்த ஐடி ரெய்டுகளுக்கு பிறகு, தமிழக அரசு, மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. போர்க்கொடி உயர்த்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசமாக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவியை பெற்றுள்ளார் ஓ.பி.எஸ்.
மீண்டும் ஆரம்பம்
அதிமுக இணைப்புக்கு பிறகு சில மாதங்களாக ஐடி ரெய்டு என்பது பெரிய அளவில் தமிழகத்தில் நடைபெறவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழக அரசுடன் தொடர்புள்ள நிறுவனங்களில் ஐடி ரெய்டுகள் நடக்கின்றன. சத்துணவுக்கு முட்டை வழங்கும், கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு நடந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரர்களாக உள்ள செய்யாதுரை மற்றும் நாகராஜன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
என்ன நோக்கம்?
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் கூறுகையில், மறைமுகமாக தமிழக அரசை மிரட்டும் நடவடிக்கைதான் இது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலை நடத்த விரும்புகிறது மத்திய அரசு. அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், தங்கள் ஆதரவு உச்ச நடிகர் ஒருவர் அரசியலில் கால் பதிக்க இவ்விரு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடப்பது அவசியம் என பாஜக நினைக்கிறது. எனவே அதிமுக தலைமையை மிரட்டி பார்க்கும் முயற்சிகள்தான் இவை. இது தவிர ஒரு சில 'உள் நோக்கங்களும்' இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறோம் என்பதால்தான், ஐடி ரெய்டுகளால் நாங்கள் அச்சப்படுவதேயில்லை என தெரிவித்தனர்.