இதற்காகத்தான் ஜெ. தீபா பேரவை... பொங்கும் அம்மா விசுவாசிகள்
72 நாட்கள் அப்போலோவில் நடந்ததை வெளியிடாத சசிகலாவை ஏற்க மறுத்து ஜெ. தீபா பேரவை தொடங்கியுள்ளதாக சேலம் அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்: ஜெயலலிதா அப்போலோவில் இருந்த 72 நாட்கள் அங்கு என்ன நடந்தது என்று சசிகலா இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும், அவர் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு பொருத்தமானர் அல்ல என்றும் கூறி சசிகலாவை ஏற்க மறுத்து ஜெ. தீபா பேரவையை சேலத்தில் அதிமுக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து கடந்த 5ம் தேதி மரணமடைந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் யார் அடுத்த தலைமை என்ற விவாதம் எழுந்தது. இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு அடித்தள தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல இடங்களில் சசிகலாவின் போஸ்டர்கள் கிழக்கப்படுவதும், சாணி அடிப்பதும் என தங்களது எதிர்ப்பை தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் இந்தப் பேரவையைத் தொடங்கியுள்ளனர். ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ள இந்த பேரவை, 60 வார்டில் உள்ள அதிமுகவினரை இந்தப் பேரவையில் இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா போன்ற உருவ சாயலை கொண்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் ரத்த உறவு இவர் மட்டும்தான் என்று கூறும் சேலம் அதிமுக தொண்டர்கள், 72 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா பற்றி எந்தத் தகவலையும் வெளியிடாத சசிகலா எங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், எம்ஜிஆர் உடல் நலம் இல்லாமல் இருந்த போது வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தது போல் ஜெயலலிதாவை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்கு முக்கியமான பங்காற்றிய சேலம் மாவட்டத்தில், தற்போது தீபாவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.