பல லட்சம் தியாக சீலர்களின் புரட்சியில் திறந்த வாடிவாசல்களை சசிகலாவுக்காக மூடிவைப்பது நியாயம்தானா?
லட்சோப லட்சம் தியாக சீலர்களின் அறவழிப் போரால் வாடிவாசல்கள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது சசிகலா என்ற தனிமனிதருக்காக வாடிவாசல்களை மூடி வைத்திருப்பது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகே நடத்துவதற்காகவே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உயிரை கொடுத்து போராடிய பல லட்சம் பேரின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை ஒத்திவைத்திருப்பது நியாயம்தானா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுப் புரட்சி... இந்தியாவின் பிற தேசிய இனங்கள் இன்று அமைதிவழி அறப் போரில் உரிமைகளுக்காக போராட வழிகாட்டியதும் இந்த மாணவர், இளைஞர் புரட்சிதான்.
வாடிவாசல் திறக்கப்படும் வரை வீடுவாசல் போவது இல்லை என்ற முழக்கத்துடன் அலங்காநல்லூரில் பற்ற வைத்த புரட்சித் தீ தமிழகம் எங்கும் பெருநெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதன்விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்து அவசர சட்டம் கொண்டுவந்தது தமிழக அரசு. நிரந்தர சட்டத்துக்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போலீசார் வேட்டையில் போராளிகள்
அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்த புரட்சியில் குதித்த, ஆதரவு தந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது போலீசால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பே தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.
சின்னம்மாதான் காரணமா?
இப்படி சர்வபரி தியாக வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இளைங்காளையரை கொச்சைப்படுத்தும் வகையில் அதிமுகவினரின் சின்னம்மாதான் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு காரணம் என ஜல்லிக்கட்டுப் பேரவையினர் பேசுவது நியாயம்தானா? சசிகலாவுக்கு நேரிலே போய் நன்றி தெரிவிப்பதெல்லாம் நியாயமா?
ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு
தற்போது உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அவற்றை ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒத்திவைத்ததே சசிகலா முதல்வரான பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்பதற்காகவே என செய்திகள் வெளியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லையா?
ரத்த வெள்ளத்தில் சுயநலகுளியல்?
போலீஸ் தடியடியில், கல்வீச்சில் மண்டை உடைந்து உடல் முழுவதும் ரணமாக கிடக்கும் அந்த போராளிகளின் ரத்த வெள்ளத்தில் சுயநல குளியல் போடுவது உங்களுக்கு கூசவே இல்லையா? இப்படி யாரோ ஒருவருக்காக பல லட்சம் தியாக சீலர்களின் ஓர்மம் வாய்ந்த புரட்சியை அடகு வைப்பதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா? அலங்காநல்லூரிலும் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த உங்கள் மனசாட்சியே பதில் சொல்லட்டும்!