ஆனந்தனின் அமைச்சர் பதவியை பறித்த 'அந்த இரு பெண்கள்'!
சென்னை: பன்னீர்செல்வம் அமைச்சரவையை அலங்கரித்த வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப் புது தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.
பன்னீர்செல்வம் அமைச்சரவையில் பதவி வகித்த இருவருக்கு ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. ஒருவர் செந்தூர் பாண்டியன். மற்றொருவர் ஆனந்தன். இதில் உடல் நலக்குறைவால் அவதிப்படும் செந்தூர் பாண்டியன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். எனவே, அவரை ஜெயலலிதா அமைச்சரவையில் சேர்க்காதது பெரிய ஆச்சரியம் தரவில்லை.
ஆனந்தனுக்கு கல்தா
ஆனால், வனத்துறை அமைச்சர் ஆனந்தனுக்கு கல்தா கொடுத்துள்ளதுதான் பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது. இத்தனை நாட்களாக விசுவாசமாக இருந்த அமைச்சர்களை மாற்றாமல் அப்படியே பதவியேற்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, ஆனந்தன் விஷயத்தில் மட்டும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனந்தன் பதவியை பறிக்க காரணம், பெண் விவகாரம் என்று கூறுகிறார்கள், விவரம் தெரிந்தவர்கள்.
அட்ஜஸ்ட்
ஜெயமணி என்ற பெண், தனக்கும் ஆனந்தனுக்கும் நெருக்கமான பழக்கம் இருந்ததாக ஒரு இதழுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பெண் அளித்த பேட்டியில், "அமைச்சர் மேல கார்டனுக்கு நிறைய புகார் போயிட்டு இருந்துச்சு. அந்தப் புகார் எல்லாம் அம்மா கவனத்துக்குப் போகாம இருக்க கார்டன்ல இருக்குற ஒருத்தரை அட்ஜெஸ்ட் செய்யணும்னு மிரட்டினார்.
ஒரு கோடிப்பு..
நான் அதுக்கு ஒத்துக்கலை. அதனால என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சார். போற இடத்துல எல்லாம் என்னை அவமானப்படுத்தினார். எல்லாத்துக்கும் மேல என்னை கட்சியில இருந்து நீக்கவும் செஞ்சுட்டார். சேர்ந்து பிசினஸ் செய்யலாம்னு என்கிட்ட ஒரு கோடி ரூபாயை வாங்கிட்டு ஏமாத்திட்டார்" என்று கூறியிருந்தார்.
400 கோடி சொத்தா?
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், சட்டமன்றம் தொடங்கி கார்டன் வரை ஆனந்தன் மீது நேரில் சென்று புகார் அளித்துள்ளார் ஜெயமணி. அமைச்சருக்கு, ‘400 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. அந்தப் பட்டியலைக்கூட வெளியிட தயார்' என்றும் ஜெயமணி கூறியிருந்தார்.
திமுகவினருக்கு பதவியா
இது ஒரு புறம் இருக்க, உட்கட்சியில் ஆனந்தனுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே கட்சி, கூட்டுறவுப் பதவிகளைக் கொடுக்கிறார். கட்சியிலேயே இல்லாவிட்டாலும் காசு கொடுத்தால் பதவி கிடைக்கிறது. தி.மு.கவினர் சிலர்கூட பதவியில் இருக்கிறார்கள். என அமைச்சர் ஆனந்தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் ஏராளமாம்.
மற்றொரு பெண் விவகாரம்
இதுதவிர்த்து ஆனந்தன் பதவி பறிப்புக்கு மற்றொரு பெண் விவகாரமும் காரணமாம். ஆனந்தனின் சகோதரி மகன் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கம்பெனியில் வேலை பார்த்த மாற்று மத பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் அவர். இதற்கு ஆனந்தன் குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு கிளம்பி, கிருஷ்ணகிரியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தது.
புகார்களுக்கு மேல் புகார்
ஆனந்தனின் ஆட்கள் ஹோட்டலுக்கு போனதாகவும், பயந்த காதல் ஜோடி விஷம் குடித்ததாகவும், பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு பையனுடன் அந்த கோஷ்டி எஸ்கேப்பானதாகவும், ஹோட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாகவும் ஒரு தகவல் உலவிவருகிறது. அதுகுறித்தும் கார்டன் கவனத்துக்கு சென்றுள்ளது. இதுபோன்ற அடுக்கடுக்கான புகார்கள் ஆனந்தன் பதவியை காலி செய்துவிட்டது என்கின்றனர் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள்.