சர்ச்சைக்குள்ளான ஜெயலலிதா சிலை... கண்ணகி, சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதன் எதிர்வினையா?
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட் ஜெயலலிதா சிலை சர்ச்சைக்கு சிவாஜி, கண்ணகி சிலைகளை அகற்றிய சாபம் தான் காரணமா?
Recommended Video
சென்னை : சென்னையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட சிலை அவரது முகவாட்டத்தில் இல்லை என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு பக்கம் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர், இந்நிலையில் ஜெயலலிதா சிலைக்கு இத்தனை சர்ச்சைகள் எழுந்ததற்கு சிவாஜி, கண்ணகி சிலைகளை அகற்றிய சாபம் தான் காரணமோ என்று சிலர் கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவசர கதியில் இந்த ஏற்பாடுகள் நடந்ததன் விளைவோ என்னவோ சிலை திறந்து வைக்கப்பட்டது முதலே சர்ச்சை மேல் சர்ச்சை எழுந்துள்ளது.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலையை விட ஒரு அடி உயர்வாக 7 அடியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. மிகுந்த சந்தோஷத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேரத்தில் ரிமோட்டை அழுத்தி சிலையை திறந்து வைத்தனர்.
ஜெ. சிலை சர்ச்சை
இந்நிலையில் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சியை விட சிலையில் இருந்த அவரின் முக அமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. வெண்கல சிலையில் இருப்பது ஜெயலலிதாவின் முகமே அல்ல என்றும் வளர்மதி, நிர்மலா பெரியசாமி இன்னும் சிலரின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
அமைச்சர்கள் முரண்பட்ட கருத்து
இதற்கு ஏற்றாற் போல முதலில் மனசாட்சி இல்லாதவர்களே ஜெயலலிதாவின் சிலை பற்றி விமர்சிப்பார்கள் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிலையின் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பின்னால் ஜகா வாங்கினார். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ நிச்சயம் அது ஜெயலலிதாவின் சிலை தான் என்று அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேட்டியளித்துள்ளார்.
சிலை சர்ச்சைக்கு என்ன காரணம்?
ஒரு சிலை வைத்ததில் இத்தனை சர்ச்சையா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கண்ணகி, சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதன் எதிர்வினையாகத் தான் இப்போது ஜெயலலிதா சிலை சர்ச்சையில் சிக்கி இருப்பதாக ஒரு பேச்சும் கிளம்பியுள்ளது.
கண்ணகி சிலையும் அதிமுக ஆட்சியும்
திமுக ஆட்சி காலத்தில் மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையானது லாரி மோதி பீடம் சேதமடைந்துவிட்டதாக எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவலாமா என்றும் ஜெயலலிதா அரசு யோசித்தது.
காரணம் என்ன?
கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த சிலையை பார்த்துவிட்டு போவது நல்லது இல்லை என்றும், சிலை எடுத்த கண்ணகியால் பாண்டியன் அரசே பறிபோனது என்றும் அதனால் ஜெயலலிதா கண்ணில் படாத இடத்தில் இந்த சிலை இருப்பதே நல்லது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாலேயே சிலை அகற்றப்பட்டதாகவும் அப்போது சர்ச்சை வெடித்தது.
மீண்டும் சிலை வைத்த திமுக
இதனிடையில் திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மெரினா கடற்கரை சாலையிலேயே கண்ணகி சிலையை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனினும் கண்ணகி சிலை நிறுவப்படவில்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகே கண்ணகி சிலை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டது.
சிவாஜி சிலை அப்புறப்புறப்படுத்தப்பட்டது
இதே போன்று நடிகர் சிவாஜிகணேசனுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகே சாலையின் நடுவே சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதனால் சிவாஜி சிலை மெரினாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு அடையாறு சிவாஜி மணி மண்டபத்தில் நிறுவப்பட்டது.
சாபம் தான் காரணமா?
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சிலையை அகற்ற உத்தரவு வந்தது. எனினும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர், இருந்த போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சிவாஜி சிலையை அப்புறப்படுத்தியது. சிவாஜி, கண்ணகி சிலைகளை அகற்றிய போது பலர் கொடுத்த சாபம் தான் இன்று ஜெயலலிதாவின் சிலையையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறதோ என்று மக்கள் ஆருடம் கணிக்க ஆரம்பித்துள்ளனர்.