இளவரசி சம்பந்தி மீது செம்மரக் கடத்தல் கேஸ் இருப்பதால் விவேக் திருமணத்தில் ஜெ. பங்கேற்கவில்லை?
சென்னை: சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்மந்தி மீது செம்மரக் கடத்தல் வழக்கு இருப்பதால் இன்று நடைபெற்ற ஜாஸ் சினிமாஸ் எம்.டி. விகேக் திருமணத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி. ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் திராட்சை தோட்டத்தை கவனித்து வந்த ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதன்பின்னர் சசிகலாவுடன் போயஸ் கார்டனில் குழந்தைகளுடன் குடியேறினார் இளவரசி. அப்போது முதலே இளவரசியின் குழந்தைகளை முதல்வர் ஜெயலலிதா பரிவோடு பார்த்துக் கொண்டார். அந்த பிள்ளைகளில் ஒருவர்தான் விவேக்.
தற்போது ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள விவேக்குக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. விவேக் திருமண பத்திரிகையில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் என்று போடப்பட்டிருந்தாலும் அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு காரணமே, இளவரசியின் சம்மந்தி அதாவது மணப்பெண்ணின் தந்தை மீது செம்மரக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்தானாம்... இப்படி ஒரு தகவல் தமக்கு கிடைத்த பின்னர் திருமணத்தை நடத்தி வைப்பது சரியாக இருக்காது என்று எண்ணிதான் ஜெயலலிதா செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டாலும் நேற்றும் இன்றும் மண்டபம் முழுவதும் 'அத்தாச்சி' சசிகலா "மகிழ்ச்சி"யுடன் வலம் வந்தார். இன்று சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நேரில் வந்து வாழ்த்திவிட்டும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மகிழ்ச்சி"யில் மன்னார்குடி!