மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியது இதற்குதானாம்!
திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டுவோம் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
Recommended Video
மதுரை: திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டுவோம் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் மறைந்த ஜெயலலிதா தாமதித்தற்கு காரணமே சமூக பதற்றம் ஏற்படக் கூடாது என நினைத்ததுதானாம்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் பேட்டியளித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தேவரின் புகழை போற்றும் வகையில் முதல்வராக இருந்த கருணாநிதி மதுரை கோரிப்பாளையத்தில் அவருக்குப் பிரமாண்ட சிலை எழுப்பி பெருமை சேர்த்தார்.
நூற்றாண்டு விழாவில் திமுக
பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் மணிமண்டபம், அணையா விளக்கு அமைத்து தந்தவரும் கருணாநிதிதான்.
ஸ்டாலின் உறுதி
பசும்பொன் தேவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உரிய குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்றார் உறுதியாக.
மற்றொரு தரப்பு கோரிக்கை
ஸ்டாலினின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், முத்துராமலிங்கத் தேவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விமான நிலையத்துக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
தங்க கவசத்துடன் நிறுத்தம்
இதை உணர்ந்துதான் 13 கிலோ தங்கக் கவசத்தோடு ஜெயலலிதா நிறுத்திக் கொண்டார். அ.தி.மு.கவின் பிரதான வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்துக்கு கணிசமான பங்கு உண்டு. இருப்பினும் விமான நிலையத்துக்குப் பெயர் வைக்கும் கோரிக்கையை சற்று தள்ளி வைத்தார் ஜெயலலிதா. அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு பெயர் சூட்டப்பட்டால், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என கருதினார் ஜெயலலிதா. அதனால்தான் விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அவசரப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.