ஊரில் ஏகப்பட்ட பஞ்சாயத்து... கே.வி.ராமலிங்கம் பஞ்சர் ஆன கதை
பொதுப்பணித்துறை என்ற முக்கியப் பொறுப்பை வைத்திருந்தவர் ராமலிங்கம். ஆனால் அங்கு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். அவர் மீது ஏகப்பட்ட புகார்களும் முதல்வரிடம் குவிந்தன.
துறை சார்ந்த புகார்கள் தவிர அவர் சார்ந்த ஈரோடு மாவட்டத்திலும் அவரது செயல்பாடுகள் குறித்து முதல்வருக்குப் புகார்கள் போயின. இதையடுத்து பொதுப்பணித்துறைய அவரிடமிருந்து பறித்த முதல்வர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் தற்போது ஈரோடு நகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்துள்ளார். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக சமீபத்தில் அமைச்சர் ராமலிங்கம் மீது ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்தார். மேலும், தாராபுரம் நகராட்சி கடை ஏல விவகாரத்திலும் அமைச்சர் மீது புகார் கூறப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகராட்சி கடைகளை மறுஏலம் விடுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான 207 கடைகளை மறுஏலம் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தலைவர், துணைத்தலைவர் இடையே பிரச்னை ஏற்பட்டதால், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ராமலிங்கத்திடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர், தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும்படி கூறியதாக தெரிகிறது. கடைகளுக்கு மறுஏலம் நடத்தாவிட்டால் வரி உயர்வு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் தாராபுரத்தில் அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து வரும் 9ம் தேதி கடையடைப்பு, உண்ணாநிலை போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். தமிழக முதல்வருக்கு தாராபுரம் நகர மன்றத்தில் உள்ள அதிமுகவின் கோஷ்டிபூசல், அமைச்சரின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அமைச்சருக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு நடந்திருக்கலாம் என பேசப்படுகிறது.
ராமலிங்கம் இப்படியே நடந்து வந்தால் அடுத்து இருக்கிற அமைச்சர் பதவியும் பறிபோய் விடும் என்று அவரது எதிர்ப்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.