'சென்னைப் புறம்போக்கு'... கமல் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க இந்த பாட்டு தான் காரணமாம்!
நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க சென்னையில் புறம்போக்கு என்ற இந்தப் பாடல் தான் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை : நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க சுற்றுச் சூழல் ஆர்வலகர்களால் உருவாக்கப்பட்ட சென்னையில் புறம்போக்கு பாடல் தான் முக்கியக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் கழிவுப் பொருள் கொட்டப்படுவதால் வடசென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கருத்து தெரிவித்த கையோடு இன்று காலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை பார்த்து வந்தார்.
அந்தப் பகுதியில் எத்தகைய பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் கமல்ஹாசன் கருத்து கேட்டுள்ளார்.
வடசென்னையின் முக்கியப் பகுதியான எண்ணூரின் கழிமுகப் பகுதி துறைமுகத்தால் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது சுற்றுச்சூல் ஆர்வலர்களின் கருத்து.
18 ஆண்டு போராட்டம்
மேலும் வல்லூர் அனல்மின்நிலைய கழிவான சாம்பலைக் கழிமுகத்தில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மீன்பிடி உள்ளிட்ட தம் கடல்சார் தொழிலில் நெருக்கடியைச் சந்திப்பதாக 18 ஆண்டுகளாக அந்தப் பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாடல் வழியாக விழிப்புணர்வு
இப்பிரச்சினையைப் பொது கவனத்துக்குக் கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவருகிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன். அதன் ஒருபகுதியாகக் கலை வடிவத்தில் இப்பிரச்சினையைப் பரப்பும் எண்ணத்தில் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான கேபர் வாசுகி ‘சென்னைப் புறம்போக்கு பாடல்' என்பதை உருவாக்கியுள்ளார். கேபர் வாசுகி எழுதி இசையமைத்துத் தமிழ் ‘ராப்' பாடலாக, ஏற்கெனவே இப்பாடல் வெளியாகியிருக்கிறது.
முதன்முறையாக கர்நாடக இசையில்
கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா சென்னைப் புறம்போக்கு என்ற பாடலைப் பாடியுள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினையில் தன்னடைய கலைப் பங்களிப்பாக டி.எம்.கிருஷ்ணா இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பொறம்போக்கு உனக்கு இல்லப் பொறம்போக்கு எனக்கு இல்ல என்று தொடங்கும் இந்தப் பாடலில் முதன்முறையாக கர்நாடக இசையில் வடசென்னை பாஷைகள் சரளமாக வந்து விழுகின்றன.
கவனத்தை திசை திருப்பிய பாடல்
ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலைப் பார்த்து தான் நடிகர் கமல்ஹாசன் சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டுள்ளார். இதனையடுத்து நம் கண் முன்னே இருக்கும் ஒரு சுற்றுச்சூழல் சீர்கேட்டை தட்டிக்கேட்கும் விதமாகவே கமல்ஹாசன் எண்ணூர்பிரச்னையை கையில் எடுத்ததாக நித்யானந்த் ஜெயராமன் கூறுகிறார்.