கள்ளக்காதலுக்காக ஓடிப் போறீங்களா.. தாராளமா செய்யுங்க.. ஏன் அப்பாவிகளை கொல்றீங்க??
சென்னை: கள்ளக்காதலில் சிக்கி சின்னாபின்னமாக "துடிக்கும்" ஆண், பெண் ஆகிய இரு பாலரும் எதற்காக உயிர்களை வதம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற ஆதங்கம் சமூகத்தில் எழுந்துள்ளது.
நகை, பணம், முன்விரோதம், சொத்து தகராறு ஆகியவற்றின் காரணமாக கொலைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கள்ளக்காதலுக்காக நடத்தப்படும் கொலைகள் அதிகரித்துள்ளன.
கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை மனைவி கொல்வது, மனைவியை கணவன் கொல்வது, இல்லாவிட்டால் கள்ளக்காதலன், கள்ளக்காதலியை கொல்வது, செக்ஸ் ஆசையை சரியாக பூர்த்தி செய்யாததால் கள்ளக்காதலனை கொலை செய்வது இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கேள்விகள்
கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் குன்றத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஜாலியாக இருக்க
5 நிமிட சிற்றின்பத்துக்காக வாழ்க்கை துணையையோ குழந்தைகளையோ விட்டு செல்லும் பெண்களோ ஆண்களோ அவர்களை கொல்லாமல் சென்றுவிட்டால் என்ன?. இவர்கள் ஜாலியாக இருக்க அப்பாவி உறவுகள் என்ன பாவம் செய்தனர்?
குழந்தைகளை கொல்வது
இந்த குன்றத்தூர் சம்பவத்திலும் கள்ளக்காதலனுடன் போக நினைத்த பெண், தன் குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு முறையாக விவாகரத்து பெற்று சென்றிருக்கலாம். ஆனால் ஈவு இரக்கமில்லாமல் குழந்தைகளை கொன்றது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை நாட்கள்
அதிலும் காதலித்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவருக்கு விஷம் கொடுக்க எப்படி மனம் வந்தது. அவர் சந்தேகப்படுகிறார் என்றால் அவர் அப்படி செய்ததில் தற்போது எந்த தவறும் இல்லை என்று அபிராமியின் செயலே நிரூபித்துள்ளது. ஒரு கொலையை செய்து விட்டு எத்தனை நாட்களுக்கு மறைந்து வாழ முடியும்.
முட்டாள்களா
தமிழக போலீஸார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை அன்றாடம் செய்தித்தாள்களின் மூலம் வரும் சில செய்திகள் மூலம் அறிகிறோம். அப்படியிருந்தும் கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடினால் பிடிபடுவோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியா முட்டாளாக இருப்பது. அந்தளவுக்கு கள்ளக்காதல் கண்ணை மறைக்கிறதா.
மனசு கல்லா
குழந்தைகளை கொன்றதால் என்ன பெரிதாக நடந்துவிட்டது? தப்பி ஒரு நாள் கூட முழுசாக முடிவடைவதற்கு முன்னரே மாட்டி கொண்டதுதான் மிச்சம். இருவரின் குடும்ப மானமும் கப்பல் ஏறிவிட்டது. இனி அபிராமியின் கணவனால் எங்காவது சென்று பணியாற்ற முடியுமா. ஒரு வேளை கொலை செய்தவருக்கு உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் ஏதேனும் நடக்குமா என்பதெல்லாம் மனதில் ஓடாதா.
குழந்தை உயிர் பிழைத்திருக்கும்
குன்றத்தூர் அபிராமி ஏற்கெனவே ஒரு முறை சுந்தரத்துடன் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போதே அவரது கணவர் உஷாராகியிருக்கலாம். இனி இவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது என்று கூறி அந்த பெண்ணுக்கு விவாகரத்து கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் குழந்தைகளின் உயிரையாவது காத்திருக்கலாம்.
வேலை
இதுகுறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில் காதலிக்கும் போது எப்படி கண்ணை மறைக்கிறதோ அது போல் கள்ளக்காதலின் போது அவர்களது சிறு மூளை சரியாக இயங்காமல் மேலும் குழப்பியடிக்கும். என்ன செய்கிறாம் என்றே தெரியாமல் நாம் சந்தோஷமாக இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனைதான் பெருகும்.
கொலை செய்யாதீர்
எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் இரு பாலரும் வாழ்க்கை பிடிக்காவிட்டால் ஒதுங்கி விடுங்கள். இதுபோல் கொலை செய்து விட்டு போலீஸில் சிக்குவதால் எத்தனை பேருக்கு அவமானம் என்பதை உணருங்கள், முறைப்படி தங்கள் துணையிடம் இருந்து விவாகரத்து பெறுங்கள். குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு போய் கொண்டே இருங்கள். ஆனால் கொலை செய்யாதீர். அந்த உயிரை படைக்க எத்தனை கஷ்டங்களை ஒரு தாய் அனுபவித்திருப்பார் என்பதை உணருங்கள்... அது சரி.. இதில் கொலையாளியே தாய்தானே.. என்னத்தச் சொல்ல!