கொடூர கொலையாளி தஷ்வந்த்தை போலீசார் சென்னை அழைத்து வருவதில் தாமதம் ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: கொடூர கொலையாளி தஷ்வந்த்தை மும்பையிலிருந்து சென்னை கொண்டுவர ஏன் தாமதம் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் சிறுமி ஹாசினி மாயமானார். பிப்ரவரி 8ம் தேதி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்து கொன்ற குற்றச்சாட்டில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் செப்டம்பர் 13ம் தேதி தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வெளியே வந்த தஷ்வந்த், தனது செலவுகளுக்கு பணம் தர மறுத்த தாய் சரளாவை அடித்து கொலை செய்து நகைகளுடன் தப்பினார்.
5 தனிப்படைகள்
கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூருக்கும், அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்று தலைமறைவான தஷ்வந்த்தை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர் போலீசார்.
தஷ்வந்த் கைது
ஆனால், பாலியல் தரகர் ராஜ்குமார் தாமஸ் என்பவர் மூலம் மும்பையில் பாலியல் தொழிலாளி ஒருவரிடம் தஞ்சம் அடைந்தாராம் தஷ்வந்த். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் செப்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தஷ்வந்தை சூதாட்டத்திற்கு வந்தபோது கடந்த 6ம் தேதி கைது செய்தனர்.
வாரண்ட் பெறப்பட்டது
தார்டியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சென்னை அழைத்துச் செல்ல மும்பை போலீசார் கூறியதையடுத்து நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு மும்பையில் இருந்து சென்னை கொண்டுவருவதற்கான டிரான்சிட் வாரண்ட் வழங்கப்பட்டது.
நாடகமாடி தப்பிய தஷ்வந்த்
இதனிடையே கடந்த வியாழக்கிழமை மாலை தஷ்வந்த்தை விமான நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு முடித்ததும் வயிறு வலிப்பதாக கூறி நாடகமாடியுள்ளார் தஷ்வந்த். எனவே ஒரு பக்க கைவிலங்கை போலீசார் கழற்றிவிட்டுள்ளனர். இதை சாதகமாக்கி அங்கிருந்து தஷ்வந்த் தப்பியோடினார்.
மீண்டும் கைது
இதனைத்தொடர்ந்து மும்பை பிலாஸ்பூர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தமிழக போலீசார் புகார் அளித்தனர். மும்பை முழுவதும் தேடிய நிலையில், அந்தேரியில் உள்ள உணவகத்தில், தாடியை ஷேவ் செய்து புது தோற்றத்திற்கு மாறிய நிலையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கண்டுபிடித்து போலீசார்
கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் வாரண்ட்
இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 224ன் கீழ் மும்பை விலேபார்லே காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதன்படி தஷ்வந்தை கைது செய்து பின் நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்று அதன்பிறகுதான் சென்னைக்கு கொண்டு வரமுடியும். எனவே அதற்கான பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.