கூவத்தூர் ரிசார்டுக்கு ஒரு நீதி ... பெங்களூரு ஈகிள்டனுக்கு ஒரு நீதியா? ... இது நாங்க கேட்கலீங்க
பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் இன்று நுழைந்து சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர், கூவத்தூர் ரிசார்ட்டிற்குள் நுழையாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டுள்ளனர்.
பெங்களுரு: பிடதியில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அறைகளில் நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வருமான வரித்துறையினர், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சோதனை நடத்தாமல் அமைதி காத்தது ஏன் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இரண்டு இடங்களுக்கு பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணியும் போட்டியிடுகின்றனர்.
மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். அகமது பட்டேலை எதிர்த்து பல்வந்த் சிங் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 காலியிடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எம்எல்ஏக்கள் எண்ணிக்கை
குஜராத் சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 57ஆக இருந்தது. அகமது பட்டேல் வெற்றிபெற 46 வாக்குகள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வரை எதிர்க்கட்சித் தலைவர் வகேலா, கொறடா பல்வந்த் சிங் ஆகியோர் உள்பட 6பேர் விலகிவிட்டதால், சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பலம் 51 ஆக குறைந்துள்ளது.
மேலும் 10 எம்.எல்.ஏக்கள் வரை பாஜகவுக்கு மாறக்கூடும் என்று கூறப்படுவதால் அகமது பட்டேலின் வெற்றிவாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வந்த் சிங்கை வெற்றிபெற செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் சிறைவைப்பு
அகமத் பட்டேல் தோல்வியடைந்தால், வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் அது காங்கிரசை பாதிக்கும் என்பதால், எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44பேர் பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரிசார்ட்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார்
ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை எம்எல்ஏக்கள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆடம்பர விடுதியில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் எம்எல்ஏக்களுக்காக செலவு செய்யப்படுகிறது. இதற்கான செலவுகளை கர்நாடகா மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் கவனித்து கொள்வதாக தகவல் வெளியானது.
வருமான வரித்துறை சோதனை
இந்தநிலையில்தான் ஈகிள்டன் ரிசார்ட்டில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடியான ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும், அம்மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஐடி துறையினர் மூலம் ரெய்டு நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐடி துறையினரை ஏவியது யார்?
டி.கே.சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் அவரின் நண்பர் பாலாஜி, துவாரகநாத் ஆகியோர் வீடுகளும் சோதனைக்குத் தப்பவில்லை. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பதற்றம் நிலவி வருகிறது. முழுக்க முழுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பாஜக மேலிடம் ஏவலின் பேரில்தான் வருமான வரி சோதனை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோல்டனில் இல்லையே
கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவை முதல்வராக்க அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி வரப்பட்டு கூவத்தூர் கோல்டன் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு அமைதியாக வேடிக்கை மற்றுமே பார்த்தது. இப்போது பாஜக ஆளும் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்க முயற்சி நடக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டால் வருமான வரித்துறையை ஏவுவதா என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.