4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு,நக்மா, கனிமொழி வரலையே ஏன்?
4 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் குஷ்பு, நக்மா அழைக்கப்படவில்லை. கனிமொழியும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார்.
அனல் பறந்த பிரச்சாரத்தில் ஆளுங்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் திமுகவில் ஒரு நடிகையோ, ஏன் மகளிர் அணியில் இருந்து கனிமொழியும் கூட பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை.
மூன்று தொகுதி இடைத்தேர்தலில், திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில், காங்கிரசுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நெல்லித்தோப்பில், முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமிக்கு ஆதரவாக, திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், நக்மா, குஷ்பு ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அவர்களையும் பிரசாரத்திற்கு அழைக்கும்படி, திருநாவுக்கரசர் கூறியிருந்தார். ஆனால், திமுக மேலிடம், குஷ்பு, நக்மா பிரசாரத்தை விரும்பவில்லை. எனவே, குஷ்பு, நக்மாவுக்கு, அழைப்பும் விடுக்கவில்லை.
அதுசரி குஷ்பு, நக்மாவைத்தான் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை என்றால் திமுக மகளிரணி தலைவி கனிமொழியைக் கூட பிரச்சாரத்திற்கு அழைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு, நக்மா வருவாங்க என்று எதிர்பார்த்து திமுக தொண்டர்களும்தான் ஏமாந்து போனார்கள்.