"ஆவின்" ஊழலில் சிக்கியதாலேயே மாதவரம் மூர்த்திக்கு ஆப்பு!!
சென்னை: ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த ஊழல் முறைகேடுகளில் தொடர்பிருந்ததாலேயே அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலின் போதே ரமணாவுக்கு சீட் கிடைத்ததை மாதவரம் மூர்த்தி விரும்பவில்லை. அப்போது, ரமணா தனது முதல் மனைவி இருப்பதை மறைத்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று சிலர் பிரச்சினை கிளப்பினர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, ரமணா வகித்து வந்த வணிக வரித்துறை அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.
ரமணா மீதான வழக்கு தள்ளுபடி
அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த ரமணா, தனது குடும்ப விவகாரங்கள் குறித்து விளக்கியுள்ளார். இதனிடையே ஒரு மாதத்துக்கு முன்பு ரமணா மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
ஆவின் முறைகேடு..
இந்நிலையில், வழக்கு தள்ளுபடி ஆன விஷயத்துடன் மாதவரம் மூர்த்தி ஆதரவுடன் ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் முதல்வர் அலுவலக கவனத்துக்கு ரமணா தரப்பினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆவினில் நடக்கும் முறை கேடுகளை கண்டறிய முதல்வர் ரகசிய உத்தரவு பிறப்பித்தார்.
ஆவினில் கலப்படம்
இதன் தொடர்ச்சியாகத்தான் 2 வாரங்களுக்கு முன்பு ஆவினுக்கு பால்கொண்டு வரும் கண்டெய்னர்களில் தண்ணீர் கலப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். அதில் பிடிபட்ட மற்றவர்களிடம் நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளிக்கு பின்னணியாக இருந்ததே அமைச்சராக இருந்த மூர்த்திதான் என்று தெரியவந்தது.
ஓ.பி.எஸ். விசாரணை
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இதில் குற்றச்சாட்டுகள் ஊர்ஜிதமானதால் மூர்த்தியின் அமைச்சர் பதவியுடன் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. ‘தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளக்கம் கொடுத்துவிட்டு, அமைதியாக காத்திருந்ததால் ரமணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.