"பூசாரி"யே சும்மா இருக்காரு.. "புல்லட்டு"கள் ஏன் சீறிப் பாய்கின்றன??
சென்னை: எச் ராஜாவே தான் அப்படி பேசவில்லை என்று கூறிவிட்ட நிலையில் இந்த அமைச்சர்கள் ஆளாளுக்கு விளக்கம் கொடுப்பதை பார்த்தால் பெரும் குழப்பமாக இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் எச் ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து தேவாலயம் அருகில் மேடை அமைக்க போலீஸ் அனுமதிக்கவில்லை என்று கூறி எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீஸாரை கேவலமாக விமர்சனம் செய்யத் தொடங்கினார். மேலும் இது உயர்நீதிமன்றம் உத்தரவு என்ற சொன்ன போலீஸாரை பார்த்து ஹைகோர்ட்டாவது ------------ என்று கெட்ட வார்த்தையில் பேசினார்.
வீடியோ
இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து வழக்கம் போல் அட்மின் மீது பழி போடும் எச் ராஜாவால் தற்போது வீடியோ ஆதாரம் இருப்பதால் ஏதும் செய்ய முடியாது என்று தெரிந்ததால் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று அடித்துவிட்டார்.
செக் செய்யுங்கள்
எனினும் அவரது வாய் அசைவும் வார்த்தைகளும் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. இந்த விஷயம் இரு நாட்களோடு போய்விட்டது. ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏதோ கோபத்தில் பேசிவிட்டார். விடுங்க. அவருக்கு பிபி செக் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நடவடிக்கை
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனோ அவர் பேசியதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்று சப்பைகட்டு கட்டியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் சட்டத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டனர்.
அபத்தம்
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஏதோ வாய்தவறி பேசிவிட்டார். இதை ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள் என்று வினவியுள்ளார். எச் ராஜா "சொல்லாத" ஒரு விஷயத்துக்கு இத்தனை பேர் பரிந்து பேசுவது ஏன். ராஜாவே சும்மாயிருக்கும் போது இவர்கள் வரிந்து கட்டி கொண்டு ஆளாளுக்கு விளக்கம் என்ற பெயரில் அபத்தமாக பேசுவதை பார்க்கும் போது என்னத்த சொல்றது.