ஆளும் அதிமுகவைவிட, திமுகவை மற்ற கட்சிகள் வறுத்தெடுப்பது ஏன்?: ஞானி தரும் 'தொலைநோக்கு' விளக்கம்
சென்னை: ஆளும் கட்சியான அதிமுகவைவிடவும், திமுக மீது மக்கள் நல கூட்டு இயக்கம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதிகமாக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு காரணம் என்ன என்பது பற்றி எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞானி கருத்து கூறியுள்ளார்.
அதிமுக அல்லது திமுக என்ற இரு திராவிட கட்சிகளின் ஆட்சி கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் நீடிப்பதுதான், பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறிவரும் ஏனைய எதிர்க்கட்சிகள், இம்முறை சட்டசபை தேர்தலில் பலமுனை போட்டியை ஏற்படுத்துவதற்கான முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பாமக, நாம்தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக, தேமுதிக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், போன்ற கட்சிகள் இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
வைகோ, திருமா.
அதேநேரம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் என்ற பெயரில் தனி அணியாக களம் காண உள்ளதாக அறிவித்துள்ளன. விஜயகாந்த் உள்ளிட்ட பிற தலைவர்களை தங்கள் இயக்கத்தில் சேரவருமாறு இவை அழைப்புவிடுக்கின்றன.
வாங்கிக்கட்டும் திமுக
அதேநேரம், தேர்தல் நெருங்க உள்ள நிலையிலும், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு இணையாக எதிர்க்கட்சி தலைவர்கள் வாயில் வறுபடுவது, திமுகதான். சில நேரங்களில் அதிமுகவைவிட அதிகமாக திமுக வாங்கிக்கட்டிக்கொள்கிறது. 2ஜி ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினையில் கைவிட்டது, குடும்ப ஆட்சி போன்றவற்றை முன்வைத்து கடுமையாக எதிர்க்கட்சிகள் திமுகவை தாக்கிவருகின்றன.
ஞானி விளக்கம்
இதற்கான காரணம் பற்றி டிவி நிகழ்ச்சியொன்றில், ஞானி, கூறியதாவது: மக்கள் நலன் கூட்டு இயக்கமோ அல்லது மாற்று சக்திகள் என கூறிக்கொள்வோரோ, 2016 சட்டசபை தேர்தலை தங்கள் இலக்காக கொள்ளவில்லை என்று நான் கூறுவேன்.
தொலைநோக்கு
மாற்று இயக்கங்களின் குறி, 2021 தேர்தல்தான். அதற்காக இப்போதிருந்தே ஆயத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் போனது. மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியவில்லை. திமுக தமிழகத்தில் பலவீனப்பட்டுக்கொண்டே செல்கிறது. எனவே, திமுகவை மேலும் பலவீனப்படுத்த மாற்று இயக்கங்கள் முயல்கின்றன.
திமுக குறி
திமுகவை முற்றிலும் வீழ்த்திவிட்டால், போட்டியில் இருப்பது அதிமுக மட்டுமே. அவ்வாறு ஒரு போட்டியாளரை மட்டுமே சந்தித்தால், திமுக இடத்திற்கு தங்களால் வந்துவிட முடியும். அதன்பிறகு ஆட்சி மாற்றத்தின் பலன் தங்களுக்கு கிடைக்கும் என்று மாற்று சக்தி என கூறும் கட்சிகள் கருதுகின்றன. எனவே, 2021 தேர்தல்தான் இவர்கள் இலக்கு. இவ்வாறு ஞானி தெரிவித்தார்.