பென்னி குக்கை வழிபடும் விவசாயிகள்.. 142 அடியை எட்டத் தடுமாறும் முல்லைப் பெரியாறு.. நடப்பது என்ன?
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அணை இன்னும் நிரம்பாமல் உள்ளது பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும் கூட இரு மாநிலங்களுக்கு இடையே தேவையில்லாமல் மோதல் வெடிப்பதைத் தடுக்கும் வகையிலும், பதட்டத்தைத் தவிர்க்கும் வகையிலும் அணையிலிருந்து சிறிய அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு நிலைமையை தமிழக அரசு தணித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்போதும் கூட தமிழக அரசுதான் பெருந்தன்மையுடன், நடந்து கொள்கிறது. அதேசமயம், கேரளாவிலோ, தமிழக அரசு மீது வெறித்தனமான போக்கே காணப்படுகிறது. அணை உடைந்து விடும், மக்கள் மூழ்கி விடுவார்கள் என்று சிலர் அங்கு தேவையில்லாத பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசுத் தரப்பில் அணையின் பாதுகாப்பு மிக மிக சிறப்பாக உள்ளதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக பொதுப்பணித்துறையின் செயற் பொறியாளர் மீது கேரளத்தினர் நடத்திய அநாகரீகமான தாக்குதல் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. கேரள மாநிலத்தினின் இந்த இழி செயல் பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீர்வரத்து, விநாடிக்கு 1125 கன அடிக்குமேல் உள்ளது. இதனால், நீர்மட்டத்தை 142 அடிக்கு நிலைநிறுத்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அதேசமயம், கேரளத்தினர் தேவையில்லாத வன்முறையில் இறங்க இடம் கொடுக்காத வகையில் அணையிலிருந்து ஓரளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்னேரம் 142 அடியை எட்டியிருக்க வேண்டிய நீர்மட்டம் இன்னும் தொடாமல் இருந்து வருகிறது.
இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் உள்ள பென்னிகுவிக் நினைவிடத்தில் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளும், அதிமுகவினரும், கிராமத்தினரும் தொடர்ந்து பொங்கல் வைத்து நீர் மட்டம் உயர்ந்து வருவதைக் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். பட்டாசுகள் வெடிப்பதும் தொடர்கிறது.
பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகள் இப்படி தங்களது வாழ்க்கையின் ஆணிவேராக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொடப் போவதை நினைத்து மகிழ்ந்து வரும் நிலையில் இழி செயல்களிலும், அநாகரீக செயல்களிலும், பீதி ஏற்படுத்தும் தேவையில்லாத வேலையிலும் கேரளத்தினர் சிலர் ஈடுபட்டிருப்பது கவலை அளிக்கிறது.
சபரிமலை சீசன் வேறு ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே அங்கு தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள வெறியர்களால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தை தமிழக ஐயப்ப பக்தர்கள் இன்னும் கூட மறக்கவில்லை. தற்போது அணை 142 அடியைத் தொடப் போகும் நிலையில் மீண்டும் அதே போன்ற தாக்குதல்களை கேரளத்தினர் நடத்தலாம் என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பும் தமிழக ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இதையும் கருத்தில் கொண்ட அணை 142 அடியைத் தொட்டு விடாத வகையில் தமிழக அரசுத் தரப்பில் நிதானம் காட்டப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.