நரிக்குறவர்களுடன் தீபாவளி சீன்... கந்துவட்டி குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியர்
நெல்லையில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வரும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி 3 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தீட்டி வருவதாகவும் எளிமையாக இருப்பதாகவும் பெயர் பெற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவர் அலுவலகத்தில் வந்த கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஆட்சியராக உள்ளவர் சந்தீப் நந்தூரி. இவர் மிகவும் எளிமையாக இருப்பதாகவும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செய்து வருவதாகவும் பெயர் பெற்றவர்.
தமிழகத்தில் பலரும் பயன்படுத்திய பொருட்கள் நாளடைவில் மறக்கப்பட்டு புதிய பொருட்கள் வந்ததும், வீணாக குப்பைக்கோ, பழைய பொருட்கள் கடைக்கோ விற்று விடுகின்றனர். இந்த பொருட்களை இல்லாதோர் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஓன்றை நெல்லை கலெக்டர் அலுவலக வாயிலில் கலெக்டர் சந்தீப் தந்தூரி துவங்கி வைத்தார். இதற்கு அன்பு சுவர் என பெயரிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான பொருள்கள்
அன்பு சுவர் மையத்தில் பொது பயன்படுத்திய ஆடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், காலணிகள், புத்தகங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களை வழங்கலாம். அதை தங்களுக்கு பயன்படும் பொது மக்கள் எடுத்து செல்லலாம். இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
நரிக்குறவர்களுடன் தீபாவளி
அதேபோல் கடந்த தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார் ஆட்சியர் சந்தீப். மேலும் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனை பார்க்கும் இத்தனை எளிமையான ஆட்சியரா என்று மற்ற மாவட்ட மக்கள் மூக்கின் மீது விரலை வைத்தனர்.
தீக்குளிப்பு சம்பவம்
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர். இவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.
6 முறை புகார்
இவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீஸாரிடம் சென்றுள்ளனர். போலீஸாரும் கடன் கொடுத்தவருகளுக்கே ஆதரவாக செயல்பட்டனராம். இதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு 6 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மனம் உடைந்த இவர்கள் குடும்பத்துடன் தீவைத்துக் கொண்டனர்.
நடவடிக்கை இல்லை
பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் ஆட்சியர் சந்தீப், கந்து வட்டி புகார் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியமாக விட்டுவிட்டாரா?, இல்லை இசக்கிமுத்துவிடம் புகார் பெற்றுக் கொண்ட ஆட்சியரக அதிகாரிகள் புகாரை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லையா?, இல்லை புகாரை குப்பையில் போட்டுவிட்டனரா?. பெரும் பணக்காரர்களுக்கு பிரச்சினை என்றால் ஓடி சென்று விசாரணை நடத்தும் காவல் துறையும் ஏழைகளின் பிரச்சினை கவனிக்காதது ஏன்.
உயிர்களை திரும்ப பெறமுடியுமா
இது போன்ற அலட்சிய போக்கிற்கு யார் பொறுப்பேற்பது. கந்து வட்டி கொடுமை இனி தடுக்கப்படும் என்று ஆட்சியர் பேட்டி கொடுத்து விட்டால் போதுமா?. கருகிய உயிர்கள் திரும்ப கிடைக்குமா?. குழந்தைகளை அடித்து விட்டால் அழுதாலே பெற்ற தாயின் மனம் தாங்காது. தன் கண் முன்னே தன்னால் தீவைக்கப்பட்ட பிஞ்சுகள் அலறல் சப்தம் கேட்டு பெற்றோரின் மனம் எத்தனை பாடுபட்டிருக்கும். இந்த சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்வர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை
கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, ஆட்சியரக அதிகாரிகள், ஆட்சியர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி இந்த சம்பவத்துக்கு ஒரு வகையில் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.