தமிழக துணை முதல்வருக்கு தரும் மரியாதை இதுதானா.. இப்படி செய்திருக்க கூடாது நிர்மலா சீதாராமன்!
Recommended Video
சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் திருப்பியனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு நேற்று சென்றார், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றிருந்தனர்.
பன்னீர் செல்வத்தின், திடீர் டெல்லி விஜயம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. அரசில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, பதவிகள் கிடைக்கவில்லை என்றெல்லாம், பேசப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம் திடீரென டெல்லி சென்றதால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தனிப்பட்ட சந்திப்பு
இதை மறுத்து மதியம் 2 மணியளவில் நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம், தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச டெல்லி வந்துள்ளதாகவும், இது அரசு முறை பயணம் இல்லை என்றும் கூறினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல உதவியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக ஏன் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் அவர் டெல்லி சென்றார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
வெளிப்படையாக தெரிவித்தது ஏன்?
ஆனால், இந்த பேட்டியளித்த சில நிமிடங்களில், நிர்மலா சீதாராமன் அலுவலகம், ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா சீதாராமனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்தது. யாருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டது என்பதை இப்படி வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டிய தேவையில்லை. அந்த ட்வீட்டே, ஓபிஎஸ்சுக்கு அவமரியாதைதான். நிர்மலா சீதாராமன் அலுவலகம் தவிர்த்திருக்கலாம்.
சந்திக்காமல் திரும்பினார்
ஓ.பன்னீர்செல்வம், வெளிப்படையாக பேட்டியளித்த பிறகாவது, அவரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதையும் நிர்மலா சீதாராமன் அலுவலகம் செய்யவில்லை. எனவே யாரையுமே சந்திக்காமல் பன்னீர் செல்வம் மதியமே டெல்லி விமான நிலையம் சென்றுவிட்டார். மைத்ரேயனை மட்டும் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.
இப்போது என்ன ஆயிற்று?
பன்னீர் செல்வத்தின், சகோதரர் உடல் நலத்திற்காக ஹெலிகாப்டரே கொடுத்து உதவிய நிர்மலா சீதாராமன், இன்று சந்திப்புக்கு கொஞ்ச நேரம் கூட ஒதுக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு நேரம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் அவர் மைத்ரேயனை சந்தித்துள்ளார். அப்போது ஓபிஎஸ்சையும் சந்தித்திருக்க வாய்ப்பு இருந்தது.ஆனால் வேண்டும் என்றே தவிர்த்துள்ளது போல தெரிகிறது. அரசு முறை பயணமாக போகவில்லை என்றாலும், துணை முதல்வர் என்ற பதவியில் உள்ள பன்னீர் செல்வத்தை மைத்ரேயனை சந்தித்தபோதே நிர்மலா சீதாராமன் சந்தித்திருக்கலாமே என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக துணை முதல்வர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.