பதவியேற்பு விழா... ஜெயலலிதாவுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுக்காதது ஏன்?
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது மமதா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைவருக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் பாட்னா பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றேன்.
நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதில் அரசியல் இல்லை. பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற்ற போது அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தம்முடைய பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதாவை நிதிஷ்குமார் அழைக்கவில்லை.
மழை வெள்ள நிவாரண நிதியை தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை கண்டு மக்கள் ஏமாறப்போவதில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.