பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை பின்பற்றாதது ஏன் ? - உயர்நீதிமன்றம்
சென்னை: பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கான தடையை முறையாக பின்பற்றாதது ஏன் ? என்பது குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தல் பொதுநல மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, தனது நிறுவனத்தின் அருகே உள்ள டீ கடையில் புகை பிடிக்க பலர் வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
பள்ளிகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் வரை புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டும், அதை மீறி கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டும், பலர் விதிகளை மீறி வருகின்றனர்.
இது தொடர்பாக புகார் மனு அளித்தும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என தனது மனுவில் சரத் தெரிவித்திருந்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், சமூகத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை இருந்தும், முறையாக அமல்படுத்தவில்லை என்றும், இது தொடர்பாக சுகாதார துறை செயலரையும், காவல்துறை டிஜிபியையும் தானாக முன் வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாராக சேர்ப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக இருவரும் 2 நாட்களுக்குள் பதிலளிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.