அரசு அலுவலகங்களிலேயே ஏன் டாஸ்மாக் திறக்கக் கூடாது? - ஒரு பலே யோசனை!!
மதுக்கடைகளை புதிய இடங்களில் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஏன் அரசு அலுவலக வளாகங்களிலேயே டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என ஒரு அதிரடி மனு அரசுக்கு வந்துள்ளது.
இது நக்கலா... வேண்டுதலா எனத் தெரியாத அளவுக்கு எழுதப்பட்டுள்ள அந்த மனு:
பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
கோவை
பொருள்: டாஸ்மாக் கடை வேண்டுதல் தொடர்பாக,
ஐயா,
வணக்கம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கோவையில் செல்வத்தை அள்ளித்தந்த சுமார் 154 மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நமது மாவட்ட நிர்வாகம் தள்ளப்பட்டது.
சரி வேறு இடத்திற்கு மாற்றிவிடலாம் என எண்ணிய நமது அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் இந்த பொதுமக்கள் தடுக்கின்றனர். மிரட்டினால் ஓடி விடுவார்கள் என நினைத்தால் நமது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்கின்றனர். கைகலப்பு நடக்கிறது.
பல இடங்களில் இவர்களது தொந்தரவு, தாங்க முடியாத ஆத்திரத்தைத் தருகிறது. நாமும் மனிதர்கள்தானே. இனிமேல் இவர்களிடம் நாம் கெஞ்சக் கூடாது.
நமக்கு சொந்தமான, அரசுக்கு சொந்தமான ஒவ்வொரு ஊரிலும் விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஏன் கண்டிப்பாக ஏதாவதொரு அரசுக்கு சொந்தமான அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்தின் எதாவது ஒருமூலையில் நாம் டாஸ்மாக் கடையை திறக்கலாம். ரேஷன் கடை மாதிரி. யார் வந்து தடுப்பார்கள் என பார்க்கலாம். டாஸ்மாக் கடையும் அரசுடையதுதானே? நமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கடைசியிலும் ஒரு கடையை திறக்கலாம்... யார் வந்து தடுப்பார்கள் பார்க்கலாம்!
மீறி யாராவது வந்து தடுத்தால் அரசு அலுவலகத்தில் வந்து பிரச்சனை செய்கிறார்கள் என காவல்துறையினரிடம் கூறி நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து விடயங்களுக்கும் முன்னோடியாக திகழும் கோவை மாவட்டம் இந்த விசயத்திலும் முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி ஐயா.
இப்படிப் போகிறது அந்த மனு. இதில் ஹைலைட்... இந்த மனு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பாக அனுப்பப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுதான்!