டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் முகாம் ஏன்? பரபர பின்னணி தகவல்கள்
Recommended Video
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டெல்லிக்கு திடீரென தனது ஆதரவாளர்களுடன் கிளம்பி சென்றுள்ளது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி ஏர்போர்ட்டில், அதிமுக எம்.பிக்கள் சார்பில் பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஓபிஎஸ் டெல்லி விஜயம் அவரது ஆதரவாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளதாம்.
உரசலுக்கு நடுவே திடீர் விஜயம்
சமீபகாலமாக பாஜக மற்றும் அதிமுக நடுவே உறவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பன்னீர்செல்வம் டெல்லி சென்றது முக்கியத்துவம் பெறுகிறது. உறவு கசந்த நிலையில்தான், தமிழக சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை ஒபந்ததாரர் செய்யாதுரை நிறுவனங்களில் வருமான வரி துறை ரெய்டுகள் நடந்ததாக கூறப்பட்டது. இது முதல்வரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயல் என அரசியல் விமர்சகர்கள் கருதினாலும், அதை முதல்வர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "தமிழகம் முழுக்க எனக்கு உறவினர்கள் உள்ளனர்" என்று கூறி இதை கடந்து சென்றுவிட்டார்.
தலைமைக்கு நெருக்கம்
இந்த நிலையில் பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருக்கும் பாஜக தலைமைக்கும் நல்ல உறவு இருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷாவும் தமிழகத்தில் பன்னீர் செல்வத்தைதான் தொடர்பு கொள்வார் என தெரிகிறது. ரெய்டுகள் நடந்துள்ள நிலையில், டெல்லியில் பன்னீர்செல்வம் முகாமிட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
பாஜக கோபம்
பாஜக அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுகவை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க கேட்டுக்கொண்டிருந்தாராம் அமித்ஷா. அதன்படியே வாக்களித்தது அதிமுக. ஆனால் 4 எம்.பிக்கள் மட்டும் வாக்கெடுப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவுடனான உறவில் பாஜகவுக்கு கசப்பு கூடியுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் முகாம்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, தமிழக திட்டங்களுக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்க பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருப்பார் என்று நினைக்கிறேன் என கூறினார். அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு உள்ளது. எனவே பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதால் அவர் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நிலைமையை அறிந்து கொண்ட, முதல்வர் தரப்பு மூத்த அமைச்சர்கள் இருவர் இன்று மாலையே டெல்லி செல்ல உள்ளனராம். அவர்கள் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இரு தரப்பும் முகாமிட்டுள்ளது தமிழக அரசியலை பரபரப்பாக்கியுள்ளது. டெல்லியில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அரங்கேறுமா, அல்லது, புதிய காட்சிகள் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.