3 மாணவிகள் விவகாரத்தை அமுக்க "கருப்பையா"வை கையில் எடுத்ததா அதிமுக?
சென்னை: ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பு என்பது "அரசியல் விதி"... அது மக்களின் தலைவிதியும் கூட. இதைக் கடந்த காலங்களிலும் நாம் நிறையவே பார்த்துள்ளோம். அந்த வகையில் பழ. கருப்பையா விவகாரத்தையும் தற்போது சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.
பழ. கருப்பையாவை எதிர்பார்த சமயத்தில் அதிமுக தலைமை கட்சியை விட்டு நீக்கவில்லை. மாறாக, திடீரென யாருமே எதிர்பாராத சமயம் பார்த்து நீக்கியுள்ளனர்.
இதுதான் ரொம்பவே இடிக்கிறது. அதுவும் கருப்பையா நீக்கப்பட்ட "டைமிங்" ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்பும் வகையிலும் அமைந்துள்ளது.
பழ. கருப்பையா
அதிமுக எம்.எல்.ஏவான பழ. கருப்பையா துறைமுகம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆவர்.
துக்ளக் விழா பேச்சு
சோ. ராமசாமியின் துக்ளக் விழாவில் ஜனவரி 14ம் தேதி கலந்து கொண்டு பழ கருப்பையாக அரசியல்வாதிகளை கடுமையாக சாடிப் பேசினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. மற்றவர்களை விட அவரது பேச்சுதான் அதிமுகவை கடுமையாக குறி வைத்தது.
ஆனாலும் அதிமுக அமைதி
ஆனால் இந்தப் பேச்சுக்குப் பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவரைப் பற்றி அதிமுக தலைமையோ மற்றவர்களோ கவலைப்பட்டது போலக் கூடத் தெரியவில்லை.
நடராஜிடம் காட்டிய வேகம் கூட இல்லை
யாரோ ஒரு நடராஜ் தந்தி டிவியில் அதிமுக அரசைக் குறை கூறிப் பேசியதைக் கூட "வெரிபை" கூட செய்யாமல் படு வேகமாக முன்னாள் டிஜிபி நடராஜை கட்சியை விட்டுத் தூக்கி தனக்குத்தானே அசிங்கப்பட்டுக் கொண்டபோது காட்டிய வேகத்தில் பாதியைக் கூட பழ. கருப்பையா விவகாரத்தில் அதிமுக காட்டவில்லை.
ரொம்ப லேட்டாக நடவடிக்கை
மிக மிக தாமதமாகத்தான் பழ. கருப்பையாவை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளது அதிமுக தலைமை. இத்தனைக்கும் அதற்கு முன்பாகவே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கடிதத்துடன் சட்டசபைக்கும் அலைந்து திரிந்துள்ளார் கருப்பையா. அப்போதும் கூட அவரை நீக்கவில்லை அதிமுக.
3 மாணவிகள் விவகாரம் காரணமா?
இந்த நிலையில்தான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியர் 3 பேர் தற்கொலை செய்த விவகாரம் வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகுதான் திடீரென இந்த பழ கருப்பையா நீக்க செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாக மாறியது.
அதை அமுக்க இதுவா?
எனவே 3 மாணவிகள் மரண விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் சூட்டை அடக்க பழ. கருப்பையாவின் பழைய பேச்சை வைத்து அதிமுக அரசு "கேம்" ஆடியுள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
இது புதிதில்லை!
இதுபோல ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பி விடுவது நமது அரசியலில் புதிதில்லை என்பதால் இதுவும் நம்பும்படிதான் உள்ளது.