ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரெய்டு நடந்தது ஏன் தெரியுமா?
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரெய்டு நடந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களை சசிகலா குடும்பத்தினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்பதால் அங்கு ரெய்டு நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அவருக்கு பரீட்சயமானவர்கள் வீடு என 187 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது.
ஜெ.வீட்டில் ரெய்டு
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தொண்டர்கள் அவருக்கு எழுதிய கடிதங்களையும், பென் டிரைவ்களையும், கொண்டு சென்றனர்.
ஒரே குடும்பத்தை குறிவைத்து
சசிகலா குடும்ப உறுப்பினர்களை குறி வைத்து கடந்த வாரம் 5 நாள்களுக்கு ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கு அரசியல் உள்நோக்கம் என்றெல்லாம் குற்றம்சாட்டினர். ஆனால் திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் ஜல்லடை போட்டு அதிகாரிகள் தேடினர். ஒரு டெம்போ முழுவதும் பொருள்களை அள்ளிச் சென்றனர்.
முக்கிய ஆவணங்கள்
ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது என்ற காரணத்தால் சசிகலா மற்றும் உறவினர்கள் முக்கிய ஆவணங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக பணமதிப்பிழப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனைகள் அடங்கிய பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை பதுக்கி வைத்திருக்கலாம் என வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்ததாம்.
திடீர் சோதனை
வருமான வரித் துறையின் பார்வை போயஸ் கார்டன் பக்கம் திரும்பவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கார்டனில் உள்ள ஆதாரங்களை அழிக்க சசிகலா குடும்பத்தினர் முயற்சித்ததாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்ததால் அதிரடியாக நேற்று ரெய்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முடிவில் விவேக் மற்றும் பூங்குன்றன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ ஆதாரம் எங்கே?
187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததற்கான புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அவை ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.