பதவி சுகம் அனுபவித்தபோது பேசாமல் இப்போது சீறுகிறாரே ஓ.பி.எஸ்.. ஸ்டாலின் விளாசல்
சென்னை: முதல்வராக பதவி வகித்த வரை ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறாத ஓ.பன்னீர்செல்வம் தற்போது நீதி விசாரணை கோருவது ஏன் என்று ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படத்தை உடனடியாக அகற்றத் தவறினால், கோர்ட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா படமே இல்லாத தமிழகத்தை உருவாக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதுகுறித்து ஓ.பி.எஸ். கூறுகையில் மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு தன்னிகரில்லாத தலைவியை பார்த்து ஸ்டாலின் இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் கூறுவதாக ஓ. பன்னீர் செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஸ்டாலின் பதிலடி
இதற்கு உரிய பதிலடி தரும் வகையில் சென்னையில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். அவர் பதவியில் இருக்கும் வரை ஜெயலலிதாவின் மரணம குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பதவிக்கு ஆபத்தால்
தன்னுடைய முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டது வரை மௌனமாக இருந்து விட்டு, பதவிக்கு ஆபத்து வந்தவுடன் தியான போராட்டம் நடத்திய பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்த திடீர் அரசியல் விசுவாசத்துக்கு என்ன காரணம். பதவிக்காக தங்கள் கட்சித் தலைவரின் மரணத்தின் மர்மங்கள் குறித்து கண்டுகொள்ளாதவர்கள் அதிமுகவினர்.
மறக்கக் கூடாது
முதலில் தனக்கு பதவி வழங்கியர்களை மறந்து விட்டு பின்னர் தங்களுக்கு பதவி வழங்கியவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதிமுகவினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் ஸ்டாலின்.
திமுக தூண்டவில்லை
பன்னீர் செல்வத்தின் திடீர் புரட்சியின் பின்னணியில் திமுக உள்ளதாக சசிகலா தரப்பு அதிமுகவினர் கருதியிருந்த வேளையில் ல்டாலினை பன்னீர் செல்வம் எதிர்ப்பதும், அவரை ஸ்டாலின் எதிர்ப்பதும் தொடங்கியுள்ளது.