தலைமைச் செயலாளர் அறையில் நடந்த சோதனை: ஒபிஎஸ் மவுனம் காப்பது ஏன்?- ஜி.ரா கேள்வி
தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை : போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேகர் ரெட்டியிடம் நெருக்கம் காட்டிய தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன் வீடு, தலைமை செயலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்திலும் ராம மோகன் ராவின் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தலைமை செயலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல்வர் ஒபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அமைச்சரவைக் கூட் டங்கள் சிலமுறை நடந்தும்கூட அதிலும் வறட்சி, விவசாயிகள் மரணம் குறித்து எதுவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி, உயிரிழப்புகள் குறித்து எதுவும் பேசியதாக தகவல் இல்லை என்று கூறினார்.
கட்சிப் பதவி, புதிய பொறுப்பு களை தக்கவைத்துக்கொள்ளவே அமைச்சர்கள் முழுமையாக செயல்படுகிறார்கள். மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து தமிழக முதல்வர் வாய்திறக்கவில்லை. முதல்வரின் மவுனத்துக்கு காரணம் என்ன என்பது விளக்கப்பட வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.