ஓ.பி.எஸ். மொட்டை போட்டது யாருக்காக?... "அம்மா"வுக்காகவா, இல்லை தம்பிக்காகவா??
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடனனை செலுத்தியது யாருக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே அவர் மொட்டை போட்டதாக கூறப்பட்டாலும் கூட தனது தம்பி ஓ.ராஜாவுக்கு வந்துள்ள சோதனை அகல வேண்டும் என்ற கோரிக்கையுடன்தான் அவர் திருப்பதி போய் வந்ததாக சொல்கிறார்கள்.
திருப்பதிக்கு சனிக்கிழமை போயிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அங்கு அவருக்கு விஐபி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விஐபி தரிசனப் பாதையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தார். மொட்டை போட்ட திருக்கோலத்துடன் போட்டோக்களுக்குப் போஸும் கொடுத்தார்.
ஓ. பன்னீர்செல்வத்தை ரங்கநாதர் மண்டபத்தில் அமரவைத்து, அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர். ஓ.பன்னீர் செல்வம் மொட்டை போட வந்திருந்ததை அறிந்து செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் கோவிலுக்கு வெளியே கூடி விட்டனர். ஆனால் அவர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் ஓ.பன்னீர் செல்வம் கிளம்பி்ப் போய் விட்டார்.
இந்த மொட்டையும், நேர்த்திக்கடனும் ஜெயலலிதாவுக்காகத்தான் என்று கூறப்பட்டாலும் கூட தனது தம்பி ஓ.ராஜாவுக்காகவே முக்கியமாக ஓ.பி.எஸ். வேண்டிக் கொண்டதாக சொல்கிறார்கள். பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தவர் ஓ.ராஜா. தலித் பூசாரி தற்கொலை வழக்கில் இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.